மதுரையில் ஷாக்.. "கொரோனா பாதித்தவர்" என விஷம வீடியோ.. அதிர்ச்சி அடைந்த நபர் ரயிலில் விழுந்து தற்கொலை

 coronavirus: man committed suicide over corona rumor near maduraiமதுரை: சரக்கு வாகனத்தில் அம்மா, மகனை ஏற்றி செல்லும் வீடியோ "கொரோனாவால் பாதித்தவர்" என்ற தலைப்பில் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவியது.. இதை பார்த்ததும் கொதித்து போன மகன் அவமானம் தாங்காமல் தொழிலாளி ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் முஸ்தபா.. 35 வயதாகிறது.. கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்தார்... இவருக்கு கல்யாணமாகி 2 குழந்தைகள் உள்னனர்.. ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் மதுரைக்கு வந்து தன்னுடைய அம்மாவுடன் தங்கியிருந்தார்.

ஊரில் இருந்து வந்ததில் இருந்தே முஸ்தபாவுக்கு சளி, இருமல், காய்ச்சல் இருந்துள்ளது... இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று கருதி சுகாதாரத்துறை மற்றும் தல்லாகுளம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தந்தனர்.

சுகாதாரத்துறையினரும் விரைந்து வந்து இவரிடம் விசாரணை நடத்தினர்.. எனினும் சந்தேகத்தின்பேரில், முஸ்தபாவையும், அவரது அம்மாவையும் 108 ஆம்புலன்சில் ஏற்றி, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு செக் செய்ய அனுப்பி வைக்கலாம் என்று முடிவு செய்தனர்.. ஆனால் தகவல் சொல்லி 2 மணி நேரம் ஆகியும், 108 ஆம்புலன்ஸ் வரவில்லை.. அதனால் அந்த பகுதி மக்களே ஒரு சரக்கு வாகனம் ரெடி பண்ணி இவர்களை மதுரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அப்படி வண்டியில் ஏறும்போது, இவர்களை அக்கம்பக்கத்தினர் சிலர் தங்களது வீடுகளில் இருந்தே செல்போனில் வீடியோவாவும் எடுத்துள்ளனர்.. ஆஸ்பத்திரிக்கு சென்றதும் தாய் - மகனுக்கு பரிசோதனை முறையாக நடந்தது.. ஆனால் 2 பேருக்குமே கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

இதனிடையே, சரக்கு வாகனத்தில் தாயும், மகனும் ஏறிய வீடியோவை அதற்குள் யாரோ சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டனர்.. "கொரோனாவால் பாதித்தவர்" என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோ படுவைரலாக பரவியது.. இந்த வீடியோவை முஸ்தபா பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்... மன வேதனை அடைந்தார்.. கொரோனாவே இல்லாத நிலையில் இப்படி ஒரு வீடியோ வந்தது அவமானமாக நினைத்தார்.. அதனால் கடுமையான விரக்தியுடன் மதுரையிலிருந்து நடந்தே திருமங்கலம் வந்தார்.

கப்பலூர் டோல்கேட் தண்டவாளம் அருகே நின்றுகொண்டிருந்தார். எல்லா ரயிலும் ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னையிலிருந்து நெல்லை நோக்கி ஒரே ஒரு சரக்கு ரயில் மட்டும் வந்து கொண்டிருந்தது.. திடீரென அந்த சரக்கு ரயிலில் பாய்ந்து தற்கொலை முஸ்தபா செய்து கொண்டார்... இது குறித்து மதுரை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வதந்தியாக ஒரு வீடியோ வெளியானதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதே மதுரையில்தான் கொரோனாவைரஸ் பாதித்த முதல் நபர் உயிரிழந்தார்.. இதனால் அப்போதிருந்தே கொரோனா தொடர்பான வதந்திகள் இந்த மாவட்டத்தில் பரவி வருகின்றன.. சுகாதார துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டும், பரப்பப்பட்ட தவறான வதந்தியால் ஒரு உயிரே இன்று காவு வாங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது!

Comments