உள்ளாட்சி தேர்தலில் அதிமுக நிறைய குழப்பம் செய்து வைத்துள்ளது.. அவங்க நினைப்பே வேற.. ஸ்டாலின்

செய்தியாளர் சந்திப்பு சென்னை: உள்ளாட்சி தேர்தலை தடுத்த நிறுத்த நீதிமன்றத்திற்கு சென்று திமுக தடை பெறுவதாக தவறான குற்றச்சாட்டு சொல்கிறார்கள்.. ஆனால் உண்மையில் திமுகவின் நோக்கம் என்பது உள்ளாட்சி தேர்தலை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என்பது தான் என அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை முறைப்படுத்த கோரி திமுக மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் விவகாரத்தில் வார்டு மறுசீரமைப்புப் பணிகள், இடஒதுக்கீடு, சுழற்சி நடைமுறை மற்றும் இதர சட்டத் தேவைகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு அரசு ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதன் பிறகே தேர்தல் நடத்தும் அறிவிப்யை வெளியிட உத்தரவிட வேண்டும்' என்று திமுக தெரிவித்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனதிமுக முறையிட்டுள்ளது.

இந்நிலையில் திமுக தான் உள்ளாட்சி தேர்தலை நடத்த விடமால் வழக்கு போடுவதாக விமர்சனங்கள் எழுந்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும் போது உள்ளாட்சி தேர்தலை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என்பதே திராவிட முன்னேற்ற கழகத்தின் நோக்கம் என்றும் முறைப்படுத்தாமல் உள்ளாட்சி தேர்தல் நடந்தாலும் தாங்கள் சந்திக்க தயார் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஸ்டாலின் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என நீதிமன்றத்துக்கு சென்று திமுக தடை பெறுவதாக தவறான குற்றச்சாட்டு சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை என்றார்.

உள்ளாட்சித் தேர்தலில் வார்டு வரையறையை அதிமுக அரசு இதுவரை செய்யவில்லை என்று கூறிய ஸ்டாலின், . நீதிமன்ற உத்தரவுப்படி வார்டு மறு வரையறையை அரசு செய்யாமல் இருப்பதாகவும் புதிய மாவட்டங்களுக்கான மறு வரையறையும் இன்னமும் செய்யப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசு ஏராளமான குழப்பங்களை செய்துள்ளதாகவும். யாராவது நீதிமன்றம் சென்றால் தேர்தலை நிறுத்திவிடலாம் என அதிமுக நினைப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் தனது பேட்டியில் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

Comments