26 வயதில் பீகாரின் துணை முதல்வராகும் லாலுவின் இளையமகன்... மூத்த மகனுக்கும் முக்கிய அமைச்சர் பதவி!

Embedded image permalinkOneIndia News : பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அரசில் லாலுவின் இளைய மகனான 26 வயதாகும் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக உள்ளார். மற்றொரு மகன் தேஜ்பிரதாப்பும் அமைச்சராகியுள்ளார். பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய 3 பெரிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இமாலய வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் நிதிஷ்குமார்தான் என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார் லாலு பிரசாத்.

லாலுவைப் பொறுத்தவரையில் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவர் என்பதால் 6 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. லாலுவின் மனைவியான முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி தீவிர அரசியலைவிட்டே ஒதுங்கிவிட்டார். லாலுவின் 2 மகன்களும் 30 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த முடியாது. ஆகையால் நிதிஷ்குமாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினார் லாலு. தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் நிதிஷ்குமார்தான் முதல்வர் என்று திட்டவட்டமாக அறிவித்தார் லாலு.

இந்நிலையில் இன்று நடைபெற நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் அவருக்கு அடுத்ததாக லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் அமைச்சராகப் பதவியேற்றார். கடந்த சில நாட்களாக, லாலுவின் இளைய மகன் தேஜஸ்விக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக நிதிஷ்குமாருக்கு அடுத்து பதவியேற்றார். அவருக்கு வயது 26தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து 3வதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவும் அமைச்சராகப் பதவியேற்றார். பதவி பிரமாணத்தை அவர் தவறாகப் படித்ததால் மீண்டும் வாசித்தார். அவருக்கும் முக்கியமான இலாகா ஒதுக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது. இவருக்கு வயது 28. நாளை தேஜ்பிரதாப் யாதவுக்கு பிறந்தநாள்.

Comments