நவீன ரக துப்பாக்கியுடன் பெண் நக்சல்கள் ஊடுருவல்: சுட்டுத்தள்ள அதிரடிப்படை போலீசார் முடிவு

தினமலர் செய்தி : தமிழக, கேரள மாநில எல்லைகளில், துப்பாக்கியுடன், மூன்று பெண்கள் உட்பட, ஏழு பேர் கொண்ட, நக்சலைட்டுகள் ஊடுருவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை சுட்டு தள்ள, அதிரடி படையினர், மூன்று மாநில எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், சில ஆண்டுகளுக்கு முன், வேலூர் மாவட்டம், பள்ளிப்பட்டில் துவங்கி, தேனி மாவட்டம், வருஷநாடு மலை, பெரியகுளம், போடிநாயக்கனூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, ஊத்தங்கரை மற்றும் நாகர்கோவிலில் உள்ள கீரிப்பாறை வரை, நக்சலைட்டுகள் ஆதிக்கம் தலைவிரித்தாடியது.
மேலும், கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லைகளிலும், நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அங்கு, அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு, நக்சல்களை சுட்டு தள்ளினர். அதன்பின், நக்சல் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.இந்த நிலையில், கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், போலீசார் ரோந்து சென்ற போது, நக்சல்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின், அடர்ந்த காட்டுக்குள் தலைமறைவாகி விட்டனர்.

சுட்டுத்தள்ள முடிவு:இந்த தகவல்கள், கேரள தமிழக எல்லைகளில், காட்டுத் தீ போல் பரவியது. அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.முதற்கட்ட விசாரணையில், வயநாடு அருகில் உள்ள, மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு வந்த நக்சலைட்டுகள், மருந்து, துணி, அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி சென்று இருப்பது தெரிய வந்துள்ளது.

பெண் நக்சல்:நக்சல் குழுவில், ஏழு பேர் இடம் பெற்றுள்ளனர். அதில், மூன்று பேர் பெண்கள் என்பதையும், போலீசார் உறுதி செய்துள்ளனர். அவர்களிடம் நவீன ரக துப்பாக்கிகள் உள்ளன. அவர்களை, உயிருடன் பிடிப்பது அல்லது சுட்டுத் தள்ளுவது என, போலீசார் முடிவு செய்துள்ளனர். நக்சலைட்டுகள், கேரள, கர்நாடக மாநில எல்லைகளில் இருந்து, ஆந்திராவிற்கு தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், மூன்று மாநில எல்லைகளிலும், அதிரடி படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நக்சலைட்டுகள் ஒழிப்பு படையில் இடம் பெற்றுள்ள உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:நக்சலைட்டுகள், தங்கள் தலைவனின் நினைவு தினத்தில், இது போன்று தாக்குதல்கள் நடத்துவது வழக்கம். அண்மையில், யாருடைய நினைவு தினமும் இல்லை. அப்படி இருக்கையில், அவர்கள் எப்படி ஊடுருவினர் என்பது குறித்து, ஆச்சரியமாக உள்ளது.ஊடுருவி இருப்பது நக்சல் தானா அல்லது வேறு யாராவது பதுங்கி இருக்கின்றனரா என, விசாரித்து வருகிறோம். கேரள மாநிலம், வயநாடு பகுதியில், 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், மலை வாழ் மக்கள் வசிக்கின்றனர். அவர்களை குறிவைத்து தான், நக்சலைட்டுகள் வந்துள்ளனர். மூன்று மாநில அரசுகளை கண்டித்து, மலையாளத்தில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களையும், வழங்கி விட்டு சென்றுள்ளனர். வனத்தில் இருந்து அவர்கள் வெளியேறாதவாறு, சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.நெல்லை மாவட்டம், சிவகிரி, புளியங்குடி, கடையநல்லூர், குற்றாலம் ஆகிய வனப் பகுதியில், நான்கு ரேஞ்சுகளில், 35 ரோந்து படைகள் உள்ளன. மலைக்குகைகளில் யாரேனும் பதுங்கி உள்ளனரா என்பது குறித்து தேடி வருகிறோம்.களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதிகள் மற்றும் ஆரல்வாய்மொழி மலைப் பகுதிகளில் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் நவீன பயிற்சி பெற்ற வனத்துறை வீரர்களும், நக்சலைட்டுகளை தேடி வருகின்றனர்.மேலும், வேலூர் மாவட்டம், பள்ளிப்பட்டில் இருந்து, தென் கோடியில் உள்ள, நாகர்கோவில் கீரிப்பாறை வரை, நக்சலைட்டுகளை தேடும் வேட்டை தொடர்கிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Comments