வாரணாசி தொகுதியில் கிராமத்தை தத்தெடுத்தார் மோடி: பெண் சிசுக்களை கொல்ல வேண்டாம் என வேண்டுகோள்

தினமலர் செய்தி : வாரணாசி : உ.பி., மாநிலம், வாரணாசி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஜெயபூர் கிராமத்தை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தத்தெடுத்தார். அதை, மாதிரி கிராமமாக மாற்ற முடிவு செய்துள்ளார். 'கிராம மக்கள், தங்கள் ஊரின் பிரச்னைகளைத் தீர்க்க அரசையே சார்ந்திருக்காமல், தாங்களே தீர்க்க முன்வர வேண்டும்' என்றும் அழைப்பு விடுத்தார்.


லோக்சபா தேர்தலின் போது, நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி, வாரணாசி. பிரதமர் பதவியை ஏற்றுள்ள அவர், அந்தத் தொகுதியை மேம்படுத்த வேண்டும் என்பதில், தீவிர அக்கறை காட்டி வருகிறார்.இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக, தன் தொகுதியான வாரணாசிக்கு வந்த பிரதமர் மோடி, வாரணாசியில் இருந்து, 30 கி.மீ., தொலைவில் உள்ள ஜெயபூர் கிராமத்திற்கு சென்றார்.

அந்தக் கிராமத்தை தத்தெடுப்பதாக அறிவித்த அவர், அங்கு கூடியிருந்த மக்களிடையே, 20 நிமிடங்கள் பேசியதாவது:பார்லிமென்டை, கிராமங்கள் தத்தெடுக்கும் புதிய பாரம்பரியத்தை, நான் துவக்க விரும்புகிறேன். கிராமத்தை, எம்.பி., தத்தெடுத்ததாக இனி யாரும் சொல்லக் கூடாது. கிராமம், என்னை தத்தெடுத்ததாகவே சொல்ல வேண்டும். இந்த ஜெயபூர் கிராமம், இந்திய பார்லிமென்டை தத்தெடுத்திருக்கிறது.பெண்களை குடும்பத்தின் சுமையாக கருதுவோர், அந்த எண்ணத்தை கைவிட வேண்டும். இந்த உலகில் பெண்கள் இல்லை யெனில், மனித இனம் எப்படி வாழ முடியும்? பெண் குழந்தைகளை கருவிலேயே தாய்மார்கள் கொன்றால், இந்த உலகில் என்ன நிகழும்..!

தற்போது, 1,000 சிறுவர்களுக்கு, 800 சிறுமியரே உள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால், வருங்காலங்களில், 200 சிறுவர்கள், மணமாகாத வர்களாக இருப்பர். இந்தப் பிரச்னையை எல்லாம், அரசு தீர்க்க முடியுமா? எனவே, கருவிலேயே பெண் சிசுக்களை கொல்வதை தவிர்க்க வேண்டும்.சாப்பிடுவதற்கு முன், கை கழுவாததால், அண்டை நாடு ஒன்றில், 40 சதவீத குழந்தைகள், இளம் வயதிலேயே இறப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், சாப்பிடும் முன் கைகழுவ வேண்டும். குழந்தைகள் கைகழுவிய பின் சாப்பிடுவதை, கிராமவாசி கள் அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு மோடி பேசினார்.

மூன்றாம் புரட்சியை உருவாக்கியவர்:

''சரியான தொழில்நுட்பத்தை, பாரம்பரியத்துடன் இணைப்பதன் மூலம் இந்தியாவில் மூன்றாவது புரட்சியை உருவாக்கி, நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல, பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்,'' என, நோபல் பரிசு பெற்றவரும், இஸ்ரேல் முன்னாள் அதிபருமான ஷிமோன் பெரஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:இந்தியாவில் முதல் புரட்சி, மகாத்மா காந்தியால் உருவானது. பின், நீடித்து நிலைக்கக் கூடிய இந்தியா உருவாக களம் அமைத்துக் கொடுத்தவர், ஜவகர்லால் நேரு. நேரு, வழக்கத்திற்கு மாறான சில விஷயங்களைச் செய்தார்.தற்போது, இந்தியாவை பற்றிய நிறைந்த அனுபவமும், அறிவும் கொண்டுள்ள பிரதமர் மோடி, காந்தியின் உணர்வுகள் மற்றும் நேருவின் சாதித்த விஷயங்களை ஒன்றிணைத்து, மூன்றாவது புரட்சியை உருவாக்கி உள்ளார். இதன்மூலம், இந்தியா புதிய உச்சத்தை தொடும்.இவ்வாறு, பெரஸ் கூறினார்.

ஜவுளி துறையில் மேம்பாடு தேவை:

வாரணாசி தொகுதி லால்பூர் கிராமத்தில், நெசவாளர்களுக்கான வர்த்தக மையம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டிய, பிரதமர் மோடி பேசியதாவது:மின்னணு வர்த்தகம் அதிகரித்துள்ளது; அதனால், உலகச் சந்தையில் வாய்ப்பு கள் கூடியுள்ளன. நம் நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, நிறையப் பேருக்கு, வருவாய் ஈட்டித் தருவது ஜவுளி தொழிலே.ஜவுளி துறையில் தொழில்நுட்ப மேம்பாடும், மனிதவள மேம்பாடும் அவசியமானது. அப்போது தான், ஜவுளித் தொழிலை, இளைஞர்கள் கட்டாயத்தின் பேரில் இல்லாமல், பெருமைஉடன் ஏற்க முன்வருவர்.வாரணாசி நெசவாளர்கள், மின்னணு வர்த்தக சந்தை மூலம் உலக அளவிலான நுகர்வோரை சென்றடைய முற்பட வேண்டும்.இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.

Comments