பெண்ணின் கேள்வியால் மௌனமான ராகுல்

ஆசிட் வீச்சில் ஒரு கண் பார்வையை இழந்த பெண்மணி ஒருவர் கேட்ட அடுக்கடுக்கான கேள்வியால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலளிக்க முடியாமல் மௌனமாகிவிட்டார்.
பெங்களூர் சென்றிருந்த ராகுல் காந்தி அங்கு 200க்கும் மேற்பட்ட இளைஞர்களை சந்தித்து உரையாடினார்.

அவர்களில் ஒருவர் சோனாலி சர்மா. இவர் சமீபத்தில் தொலைக்காட்சி கேம் ஷோவில் வெற்றி பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். இவர் ஆசிட் வீச்சில் ஒரு கண் பார்வையைப் பறி கொடுத்தவர்.


ராகுல் காந்தி சந்திப்பின்போது சோனாலி பல்வேறு கேள்விகளை அவர் முன் வைத்து அவரால் பதிலளிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளார்.

சோனாலி ராகுலிடம் பேசுகையில், என்னைப் போன்ற பாதிக்கப்பட்டோருக்கு அரசியலில் வாய்ப்பளிக்க அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும். ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட எங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். எங்களது சிகிச்சைச் செலவுகளை அரசே ஏற்க வேண்டும்.

எங்ளுக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்க அரசுதான் வகை செய்ய வேண்டும். நான் தினசரி செத்துச் செத்துப் பிழைக்கிறேன் என்றும் கிட்டத்தட்ட 10 வருடங்களாக நான் நீதி கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

அவர் பேசுவதை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த ராகுல் காந்தி, பின்னர் ஏன் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேண்டும். நீங்கள் நேரடியாக லோக்சபா தேர்தலிலேயே போட்டியிடலாமே என்று கேட்டு விட்டு, பின்னர் கூட்டம் முடிந்ததும் தன்னை வந்து சந்திக்குமாறும் சோனாலியிடம் கூறியுள்ளார்.

ஆனால் கூட்டம் முடிந்ததும் ராகுல் காந்தி அங்கிருந்து வேகமாக சென்று விட்டதால் சோனாலியால் அவரைச் சந்திக்க முடியாமல் போனது.

இந்த சந்திப்பின்போது ஆம் ஆத்மியின் வெற்றி குறித்து பேசிய ராகுல், காங்கிரஸ் ஆட்சியில் தகவல் அறியும் உரிமை பெறும் சட்டத்தை அமல்படுத்தியிருக்காவிட்டால் இன்று ஆம் ஆத்மி கட்சியே இருந்திருக்காது. மக்களுக்கு கேள்வி கேட்கும் உரிமையைக் கொடுத்தது காங்கிரஸ்தான். அதைத்தான் இன்று மக்கள் பயன்படுத்தி அரசைக் கேள்வி கேட்கிறார்கள்.

எனவே காங்கிரஸுக்குத்தான் அந்தப் பெருமை போய்ச் சேர வேண்டும் என்றும் குறுகிய காலமே வாழக் கூடிய கட்சி ஆம் ஆத்மி எனவும் கூறியுள்ளார்.

Comments