கடந்த
ஆண்டு மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்தது முதலே, மதுரை ஆதீனம்
தொடர் சர்ச்சையில் சிக்கினார். நித்யானந்தாவை நீக்கிய பின், பரபரப்புகளில்
இருந்து ஒதுங்கியிருந்த அவரை, இந்து அமைப்புகள் விடுவதாக இல்லை போலும்.
நேற்று அவர் மீது, புதிய புகார் ஒன்றை, மதுரை போலீஸ் கமிஷனர்
சஞ்சய்மாத்தூரிடம்,
இந்துமக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன் அளித்தார்.
அதில் தெரிவித்துள்ளதாவது: ஆதீன மடத்தின் சொத்துக்கள் மற்றும்
நிர்வாகத்தை, அருணகிரி நாதரே நிர்வகிக்கிறார். இவர், 1980 ல் பொறுப்பேற்றது
முதல், 33 ஆண்டுகளில் பல்வேறு இனங்கள் மூலம் பல கோடி ரூபாய் கையாடல்
செய்து, மடத்திற்கு வரவேண்டிய வருமானங்களை அபகரித்துள்ளார். மடத்தின்
வருமான, கணக்குகள் முறையாக பராமரிக்கப்படாமல், ஆதீனம் சொல்படி, கணக்குகள்
சரிசெய்யப்பட்டு வருகின்றன.
மதுரை கோர்ட் அனுமதி பெறாமல்
சொத்துக்கள் வாங்கவோ, விற்கவோ கூடாது என்ற தடையுத்தரவை மீறி, கோவையில்
ரூ.55 லட்சத்திற்கு சொத்து வாங்கியுள்ளார். மடத்தின் தற்போதைய, முந்தைய
ஊழியர்களை விசாரித்தால், பல உண்மைகள் வெளிவரும். இவ்வாறு அதில
தெரிவித்துள்ளார். புகார் குறித்து, மதுரை ஆதீனத்தின் கருத்தை கேட்க,
மொபைல் போனில் பலமுறை தொடர்பு கொண்டபோதும், அவர் போனை எடுக்கவில்லை. அவர்
சார்பாக, மடத்தின் வக்கீல் சண்முகசுந்தரம் தினமலர் நிருபரிடம் கூறியதாவது:
மடத்தின் சொத்து, வரவு, செலவுகள் அனைத்தும் தணிக்கைக்கு உட்பட்டது.
வருமானத்தை கணக்கில்லாமல் செலவழிக்க முடியாது. சொத்தை யாருக்கும் விற்கவோ,
அனுபவிக்கவோ முடியாது. யாரோ தூண்டுதலின்பேரில், ஆதீனத்தின் மீது சோலைகண்ணன்
பொய் புகார் அளித்துள்ளார். அவர் மீது நஷ்டஈடு கேட்டு, வழக்கு
தொடரப்படும், என்றார்.
Comments