‘டிவி’ புகைப்பட நிருபர், ஆட்டோ ஓட்டுனர் மீது கொலைவெறி தாக்குதல் : தொடரும் கல்லூரி மாணவர்களின் அட்டகாசம்

சென்னை : மாநில கல்லூரி மாணவர்களின் கொலைவெறி தாக்குதலில்,‘தந்தி ‘டிவி’ யை சேர்ந்த புகைப்பட நிருபர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். நகரின் பிரதான சாலையில் நடந்த இந்த சம்பவத்தில், ஒரு மாணவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று பிற்பகல் 3:00 மணிக்கு, முதல்வரின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு, ‘தந்தி டிவி’யை சேர்ந்த கார்,
மெரீனா காமராஜர் சாலையில், கண்ணகி சிலை அருகே, சிக்னலில் நின்று கொண்டிருந்தது.


வாகனங்கள் மீது தாக்குதல்:

அப்போது, சென்னை மாநில கல்லூரி யை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மாணவர்கள், சாலையை கடந்து சென்றனர். அவ்வாறு சென்ற போது, சிக்னலில் நின்று கொண்டிருந்த ‘தந்தி டிவி’ காரின் பின்புறத்தில், மாணவர்கள் பலமாக தாக்கினர். அதனால், காரில் இருந்த, பெண் நிருபர் சாந்தி, புகைப்பட நிருபர் ஜோன்ஸ் ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, காரின் பின்னால் நின்றிருந்த ஆட்டோவின் கண்ணாடி யில் மாணவர்கள் அடித்தனர். இதில் கண்ணாடி விரிசல் விட்டது. கோபம் அடைந்த ஆட்டோ ஓட்டுனர், தமீம் அன்சாரி, 35, அவர்களை தட்டிக் கேட்டார்.
கொலைவெறி தாக்குதல்:

ஆத்திரம் அடைந்த மாணவர்கள், தமீம் அன்சாரியை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது உதடு கிழிந்தது. முன்பக்கத்தில் காரில் இருந்த புகைப்பட நிருபர் ஜோன்ஸ், இந்த காட்சிகளை தன் கேமராவில் பதிவு செய்தார்.அதைப் பார்த்த மாணவர்கள், ஜோன்சை தாக்கினர். இதில் அவரது, முகம், கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது கேமராவை பிடுங்கி தரையில் எறிந்து உடைத்தனர். இதையடுத்து காயம் அடைந்த ஜோன்ஸ், தமீம் அன்சாரி இருவரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
போலீசார் உதவவில்லை:

இதுகுறித்து ‘தந்தி டிவி’ புகைப்பட நிருபர், ஜோன்ஸ் கூறியதாவது:மாணவர்கள், கார் மற்றும் ஆட்டோவை தாக்கியதை, ‘டிவி’ புகைப்பட நிருபர் என்ற முறையில், நான் வீடியோ கேமராவில் பதிவு செய்தேன். அதை பார்த்த அவர்கள், கும்பலாக வந்து கொலைவெறியோடு என்னை தாக்கி நிலைகுலைய வைத்தனர். எழுந்து நிற்பதற்குள் என் கேமராவையும் உடைத்தனர்.அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் யாரும் உதவிக்கு வரவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆட்டோ ஓட்டுனர் தமீம் அன்சாரி கூறுகையில்,‘‘எந்த காரணமும் இல்லாமல், மாணவர்களின் கொலைவெறி தாக்குதலுக்கு நான் ஆளானேன். என்அலைபேசி உடைக்கப்பட்டது. ஆட்டோவும் சேதம் அடைந்தது. மாணவர்களின், அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு போலீசார் முடிவு கட்ட வேண்டும்,’’ என, வேதனையுடன் தெரிவித்தார்.
மறியல், கைது:

‘தந்தி டிவி’ புகைப்பட நிருபர், மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம், காட்டு தீ போல் பரவியது. அதையடுத்து, காமராஜர் சாலையில், பத்திரிகையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து விரைந்து வந்த, அண்ணாசதுக்கம் போலீசார், பத்திரிகையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட மாணவர்களை கைது செய்வதாக உறுதி அளித்தனர். அதையடுத்து மறியல் கை விடப்பட்டது.வீடியோவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், சென்னை மாநிலக் கல்லூரியில், பி.ஏ., பொருளாதாரம், இரண்டாம் ஆண்டு படித்து வரும், வியாசர்பாடி, கமலம்மாள் தெருவை சேர்ந்த நவீன் குமார், 18, கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஐந்து பேரை, அண்ணா சதுக்கம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Click Here

Comments