பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு காவிரி நதிநீரை திறந்துவிடக் கூடாது என்று
கர்நாடக தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு
காவிரியில் 9 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று பிரதமர்
தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட்டது. இதனை கர்நாடகம் ஏற்க
மறுத்தது. பினன்ர் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.
உச்சநீதிமன்றமும் தமிழகத்துக்கு காவிரி நதிநீரை திறந்துவிட உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டது.
இதற்கு
பல்வேறு கன்னட அமைப்புகளும், விவசாயிகளும் எதிர்ப்புத் தெரிவித்து
போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் உள்ள தமிழ்ச்
சங்கக் கூட்டமைப்பும் தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட எதிர்ப்புத்
தெரிவித்துள்ளது.
கர்நாடக தமிழ்ச் சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று
மைசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து
கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கர்நாடக தமிழ்ச் சங்கக்
கூட்டமைப்பின் தலைவர் புகழேந்தி, கர்நாடகாவில், கன்னட தமிழ் மக்கள்
ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். கர்நாடகத்தில் வாழும் கன்னடர்களுக்கு
பாதிப்பு ஏற்பட்டபோதெல்லாம், தமிழ்ச் சங்கங்கள் ஒன்றாக இணைந்து கன்னட
சகோதரர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் தற்போது
கர்நாடகத்தில் வசிப்பவர்களுக்கே குடிக்க தண்ணீர் இல்லை. விவசாயிகள் மிகவும்
பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆடு, மாடுகளுக்கு கூட தண்ணீர் இல்லை. தீவனம்
இல்லை.இந்தநிலையில் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விட்டது சரியல்ல.
தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு தடை செய்ய வேண்டும் என்றார்
அவர்.
முன்னதாக மைசூர் அரண்மனை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் இருந்து
ஆட்சியர் அலுவலகம் வரை கர்நாடக தமிழ்ச் சங்க கூட்டமைப்பு சார்பில் மவுன
ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
Comments