திருவண்ணாமலை: திருவண்ணாமலையிலிருந்து நித்தியானந்தா திடீர் தலை
மறைவானதையடுத்து கிரிவலப்பாதையில் உள்ள தியான பீடம் வெறிச்சோடியது.
திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் உள்ள தியான பீடத்தில் கடந்த
20நாட்களுக்கும் மேலாக நித்யானந்தா தங்கி தியான பயிற்சி வகுப்பில் கலந்து
கொண்டு பயிற்சி அளித்து வந்தார்.மேலும்
இங்கு நவராத்திரி பண்டிகை
கொண்டாடப்பட்டு வந்தது, இதனை முன்னிட்டு தினமும் பாட்டு கச்சேரி
நடத்தப்பட்டு வந்தது.தற்போது இளைய ஆதினப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதை
அடுத்து நித்யானந்தா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். இளைய ஆதின
பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து அவரது நெருங்கிய தொடர்புடைய முக்கிய
பிரமுகர், மற்றும் அவரது சீடர்களிடம் 19ஆம் தேதி இரவு முழுவதும் விடிய
விடிய ஆலோசனை நடத்தினார்.பின்னர் நேற்று 20ஆம் தேதி மாலை நவராத்திரி
விழாவில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார், அப்போது
நவராத்திரி விழா முடியும் வரை இங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருளாசி
வழங்கப்படும் என்று கூறி வந்தார்.ஆனால் தியான பயிற்சி முகாம் வரும் 28ஆம்
தேதி வரை நடைபெற இருந்த நிலையில் திடீரென நித்யானந்தா இரவோடு இரவாக
தலைமறைவாகி விட்டார்.பின்னர் அதனை தொடர்ந்து இன்று காலை முதல் மாலை வரை
அவரது சீடர்கள் மற்றும் தியான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 50க்கும்
மேற்பட்டவர்களும் ஒவ்வொரு குழுவினராக பிரிந்து திருவண்ணாமலை தியான
பீடத்திலிருந்து காலி செய்து கொண்டு பெங்களூர் சென்றனர்.பின்னர் இது
குறித்து தியான பீடத்தில் இருந்த அவர்களின் சீடர்களிடம் கேட்டபோது, அவர்கள்
பதிலளிக்கையில்,தியான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பெங்களூர்
ஆசிரமத்தில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது, அனைவரும் பெங்களூரில்
உள்ளனர் என்று தெரிவித்தனர்.வரும் 28ஆம் தேதி வரை திருவண்ணாமலையில் தியான
பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று கூறிவிட்டு திடீரென அவர் பெங்களூர்
சென்றது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Comments