மாறி, மாறி... சே, தப்பு பண்ணிட்டோம்.. அன்புமணி வேதனை!

 We Will Not Allign With Any Dravidian Parties
சென்னை: மாறி மாறி திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தவறு என்பதை உணர்ந்து விட்டோம். இனி எப்போதும் தனித்தே போட்டியிடுவோம் என்று கூறியுள்ளார் பாமக இளைஞர் அணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,
பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 15 ஆண்டுகளாக திராவிட கட்சிகளுடன் மாறி, மாறி கூட்டணி அமைத்து வந்துள்ளது. இதனால், பாமக மீதான நம்பகத்தன்மை
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது தவறு என்பதை உணர்ந்து கொண்டுள்ளோம். மக்களிடம் கட்சி இழந்த நம்பிக்கையை திரும்ப பெறுவதற்கு ஒரு முன்னுரை அமைத்துள்ளோம்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டு, மக்களிடம் நம்பிக்கையை பெறுவோம். இது 2016-ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்கி செல்ல உதவிகரமாக இருக்கும். கட்சி விரும்பினால் பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன்.
கடந்த 2001 சட்டசபை தேர்தலில், அதிமுக உடன் கூட்டணி சேர்ந்திருந்தோம். ஆனால், ராஜ்ய சபா தேர்தலுக்கு முன்பாகவே, அந்த கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறி விட்டோம். சுயமரியாதையை விட்டுக் கொடுத்து, அந்த கூட்டணியில் நாங்கள் நீடித்திருந்தால், ஒரு ராஜ்ய சபா எம்.பி., பதவியை பெற்றிருக்க முடியும். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை.
2011 சட்ட சபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீடு செய்து கொண்டோம். அப்போது கூட எங்களுக்கு ராஜ்ய சபா சீட் தர திமுக தலைவர் மறுத்து விட்டார். ராஜ்ய சபா சீட்டுக்காக அந்த கட்சியில் கூட்டணி அமைத்தோம் என்றால், தேர்தல் முடிந்த கையோடு திமுக கூட்டணியை விட்டு நாங்கள் வெளியேறி இருக்க மாட்டோம். இந்த இரண்டு திராவிட கட்சிகளும் தமிழகத்தின் சமூக பொருளாதார கட்டமைப்பை சீரழித்து விட்டன.
இந்த கட்சிகள் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை பாட்டாளி மக்கள் கட்சி நிரப்பும். 2016 சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி முக்கிய இடம் வகிக்கும். பாமக தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என்றார் அன்புமணி.

Comments