கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்‌டரில் கொலை

கோவை : கோவை நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி குழந்தைகள் இருவரை கடத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு பின் வாய்க்காலில் தள்ளி ஈவு இரக்கமின்றி கொன்ற கொடூர கொலைகாரன் மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன்  என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது, அனைவரும் தமிழக போலீசாரை பாராட்டியுள்ளனர். கொல்லப்பட்ட குழந்தைகளின் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இன்று மற்றொரு நகராசுரன் கொல்லப்பட்ட நாள் என இப்பகுதி மக்கள் ‌கருத்து தெரிவித்துள்ளனர்.

கோவையில் நடந்த சம்பவம் முழு விவரம் : கொலை குற்றவாளிகளான மோகன்ராஜையும், மனோகரனையும் போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது குற்றவாளிகளை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி வெரைட்டிஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கோபிநாத், சம்பவம் குறித்து விசாரித்ததுடன், போலீஸ் காவலில் செல்ல சம்மதமா? என குற்றவாளிகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள், ‌போலீசுடன் செல்ல தயாராக இருப்பதாக ‌தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியது.

சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றான்: கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5. 30 மணி அளவில் போலீசார் குற்றவாளிகள் இருவரையும் விசாரனைக்காக அழைத்து சென்றனர். வெள்ளளூர் மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே சென்றபோது, ‌கொடூர கொலைகாரன் மோகன்ராஜ் போலீசாரிடம் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி, போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றான். அவன் சுட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் முத்துமாலை ஆகிய போலீசார் காயம் அடைந்தனர்.

குற்றவாளி தப்பி ஓடுவதை பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மோகன்ராஜை சுட்டார். இதில் மோகன்ராஜ் தலையிலும், மார்பிலும் குண்டு பாய்ந்தது. மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தான்.   மோகன்ராஜ் சுட்டதில் காயமடைந்த போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மோகன்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான மனோகரன் ‌போத்தனூர் காவல் நிலையத்தில் போலீஸ் கஸ்டடியில் இருக்கின்றான். அவனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி பெற்றோர்கள் கண்ணீர் மகிழ்ச்சி: கோவை பெற்றோர்கள் பேட்டி: குழந்தைகளை கடத்தி கொன்ற கொடூரனை சுட்டுக்கொன்ற இந்நாள் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி என குழந்தைகளை பறிகொடுத்த தாய்- தந்தையர் கூறியுள்ளனர். இன்று போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் குறித்து நிருபர்களிடம் பேசிய ரஞ்சித்குமார் தம்பதியினர் மேலும் கூறியதாவது: எங்களுடைய செல்லக்குழந்தைகள் முஸ்கின் , ரித்திக் இழந்த துயரத்தில் நாங்கள் தீபாவளி கொண்டாடவில்லை. இன்று தான் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நகராசுரனை கொன்றது போல் இவனை கொன்ற இந்நாள்தான் எங்களுக்கு தீபாவளி.

கமிஷனர் சைலேந்திரபாபுவின் அதிரடி நடவடிக்கையால்தான் இது நடந்திருக்கிறது. இவரை நாங்கள் பாராட்டுகிறோம். இவ்வளவு சீக்கிரம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இது போன்ற என்கவுன்டர் மூலம் யாருக்கும் இந்த கொடூர எண்ணம் வராமல் போகட்டும். இவ்வாறு அவர் கூறினார். இன்றைய என்கவுன்டர் நடந்ததையடுத்து ரங்கேகவுடர் தெருவில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். குற்றவாளிக்கு சரியான தண்டவை வழங்கப்பட்டிருக்கிறது என போலீசாருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

தற்காப்புக்காகவே சுட்டோம் : கமிஷனர் பேட்டி ; இன்று போலீசார் நடத்தி முடித்த என்கவுன்டர் குறித்து கமிஷனர் சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின் போது அவர் கூறியதாவது: இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மோகன்ராஜ் என்ற மோகனகிருஷ்ணன் மற்றும் மனோகரன் ஆகிய இருவரையும் தனித்தனி வேனில் நேரிடை விசாரணைக்காக காலை 5. 30 மணி அளவில் பொள்ளாச்சிக்கு அழைத்து சென்றோம். இந்த வழியில் ஈச்சனாரி ரயில்வே கேட் அடைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து போத்தனூர் வழியாக மாற்று வழியில் செல்ல அழைத்து சென்றோம்.

மாநகராட்சி குப்பைத்தொட்டி அருகே சென்றபோது சப்.இன்ஸ்பெக்டர் ஜோதியின் பிஸ்டலை பிடுங்கி சுட்டு விடுவதாக மிரட்டி கேரளா நோக்கி செல்லுமாறு மிரட்டினான். இதனையடுத்து எஸ்.ஐ.,க்கள் ஜோதி, முத்துமாலை ஆகிய இருவரையும் நோக்கி சுட்டான். ஜோதிக்கு இடது கையிலும், முத்துமாலைக்கு வயிற்றுப்பகுதியிலும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உஷாரான இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை கையில் இருந்த பிஸ்டல் துப்பாக்கி கொண்டு மோகனகிருஷ்ணனை சுட்டார். இதில் இவனுக்கு தலை யில் நெற்றிப்பகுதி மற்றும் மார்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இவனை ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டான். தற்‌காப்புக்காகவே இநத என்கவுன்டர் நடத்தி முடிக்கப்பட்டது .  இவ்வாறு சைலேந்திரபாபு கூறினார்.

குழந்தைகள் கடத்தல் எப்படி நடந்தது ? : கோவை, ரங்கேகவுடர் வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்; துணிக்கடை உரிமையாளர். இவருக்கு முஸ்கின் (11), ரித்திக் (9) ஆகிய குழந்தைகள் இருந்தனர். அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த முஸ்கினும், ரித்திக்கும் கடந்த 29ம்தேதி காலை வழக்கம்போல வீட்டில் இருந்து பள்ளிக்கு கிளம்பினர். வழக்கமாக குழந்தைகளை அழைத்துச் செல்லும் கால் ‌டாக்ஸிக்கு பதிலாக வேறு ஒரு கால் டாக்சி வந்தது. அதனை ஓட்டிய டிரைவர் இதற்கு முன்பு முஸ்கினையும், ரித்திக்கையும் பள்ளிக்கு அழைத்து சென்ற டிரைவர் என்பதால் குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு அழைத்து செல்லத்தான் கால்டாக்ஸி வந்திருப்பதாக எண்ணி அதில் ஏறினார்கள். ஆனால் அந்த வேன் பள்ளிக்கு செல்லாமல் வேறு பாதையில் சென்றது.

குழந்தைகள் இருவரையும் கடத்தி, தந்தை ரஞ்சித்குமாரிடம் பணம் பறிக்கலாம் என்ற எண்ணத்துடன் கால்டாக்ஸி டிரைவர் அவர்களை கடத்திச் சென்றான். போகும் வழியில் தனக்கு துணையாக தனது நண்பனையும் அழைத்துக் கொண்ட அந்த டிரைவர், சிறுமி முஸ்கினை நண்பனுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் போலீசில் மாட்டிக் கொள்வோமோ என பயந்த அவர்கள், குழந்தைகளை கொடூரமாக தண்ணீரில் தள்ளி விட்டு கொலை செய்தான்.

கோவையை உலுக்கிய சம்பவம் : கோவை நகரையே உலுக்கிய இந்த கொடூரத்தை அரங்கேற்றிய அரக்க கொலையாளிகளான ‌கால்டாக்ஸி டிரைவர் மோகன்ராஜி என்ற மோகனகிருஷ்ணன்  (33), அவரது நண்பன் மனோகரன் (23) ஆகியோரை போலீசார் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர்.பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். ஒன்றுமே அறியாத குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்ற கொலையாளிகள் என கேள்விப்பட்டதும், சிறையில் இருந்த மற்ற குற்றவாளிகள், அவர்களை அடிக்க பாய்ந்த சம்பவமும் நடந்தது.

சிறுமி முஸ்கினை பாலியல் பலாத்காரம் செய்து ஈவு இரக்கமின்றி கொன்ற கொலையாளி மோகன்ராஜையும், அவனது நண்பனையும் விசாரணை இன்றி தூக்கில் போட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர். முஸ்கின் மற்றும் ரித்திக்கின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பலரும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக் கூடாது ; குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், வழக்கில் உ‌டனடியாக தீர்ப்பு வழங்கி தூக்கில் போட வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மோகன்ராஜ் போலீசாரால் சுட்டுக்கொன்ற சம்பவம் கோவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பொதுமக்கள் கூறுவது என்ன ? : விஜயலட்சுமி, பி.பி.குளம், மதுரை :

குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டது மிகவும் சரியானது. கோர்ட்டுக்கு சென்றிருந்தால் கூட குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காமல் போக வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் தற்போது என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது பெற்றோர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்‌டோ டிரைவர் இசக்கிமுத்து,  ராஜபாளையம் :  கோவை குழந்தைகளை கடத்திக் கொலை செய்த டிரைவர் மோகன்ராஜை என்கவுன்டரில் கொலை செய்தது சரியே என்றார். போலீசார் மிகச்சரியான முடிவு எடுத்துள்ளனர் என கூறிய அவர் பெற்றோர்களுக்கு அடுத்து பள்ளிக்குழந்தைகள் தாங்கள் செல்லும் வாகனங்களின் டிரைவர்களே அதிக அளவு நம்புகின்றனர் , அப்படிப்பட்ட டிரைவர்கள் இது மாதிரியான குற்றங்களில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். மேலும் டிரைவர்கள‌ை தேர்வு செய்யும் போது பெற்றோர்கள் கவனத்துடன் இருப்பது இது போன்ற குற்றச்சம்பவங்களை குறைக்க உதவும் என தெரிவித்தார்.

மதுரை ஆட்டோ டிரைவர் கதிரவன்:  கோவை கடத்தல் சம்பவம் மானுட சமுதாயம் சந்தித்த மிகவும் கொடூரமானது. குற்றவாளி மோகன்ராஜை என்கவுன்டரில் கொன்றது சரியே. இருப்பினும் கொலையாளியை பிடித்த அன்றைக்கே என்கவுன்டரில் கொலை செய்திருக்க வேண்டும் என மதுரை வடக்குமாசிவீதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கதிரவன் தெரிவித்தார்.

சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் அபுதாகீர்:  இதுவரை பிரபல ரவுடிகள் மட்டுமே என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டுவந்த நிலையில், முதல் முறையாக குழந்த‌ை கடத்தலில் ஈடுபட்டவர் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இது இது போன்ற டிரைவர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தும்.

கலைச்செல்வி குடும்பத்தலைவி திண்டுக்கல் : வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. இருந்தாலும் குழந்தைகளை கடத்தி கொடூரமாக கொலை ‌செய்த குற்றவாளியை என்கவுன்டரில் கொலை செய்தது மிகவும் சரியானது. இது பெற்றோர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தேனி காந்திநர் பிச்சைமணி : குற்றவாளிகளை பொதுமக்கள் கையில் ஒப்படைந்திருந்தால் அன்றைக்கே தண்டனை கொடுத்திருப்பார்கள். இருந்த‌ாலும் போலீசார் என்கவுன்டரில் கொன்றது சரியே.

சுந்தரராஜ்; விநாயகர்கோயில் பூஜாரி: ரங்கேகவுடர் வீதி , கோவை: குழந்தைகள் கொல்லப்பட்ட வீதியில் உள்ள பூஜாரி சுந்தர்ராஜ் கூறியதாவது: இந்தக்குழந்தைகள் எனக்கு ஒரு ஆண்டுக்கு மேலாக தெரியும். தினமும் பள்ளிக்கு செல்லும்போது கோயிலில் தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். இந்தக்கொடூர குற்றத்திற்கு போலீசார் கொடுத்த தண்டனை திருப்திகரமாவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

நாரங்கி திஷ்தாதேவி கோவை : போலீசார் நடவடிக்கை திருப்தியாக உள்ளது. இவ்வளவு சீக்கிரம் போலீசார் கதையை முடிப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இன்று நாங்கள் அனைவரும் இனிப்பு வழங்கினோம்.

சுப்பிரமணியம் , மதுரை : குழந்தையை கடத்த வேண்டும் என்று திட்டமிட்டு கொண்டிருக்கும் திருடர்கள் கூட இந்த குற்றச்செயலில் ஈடுபட மாட்டார்கள். போலீசாருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது வரவேற்க வேண்டிய விஷயம் .

ஹரிபாபு சேலம் :  ரியல் எஸ்டேட் புரோக்கர் : குழந்தை கடத்தல் போன்ற இந்த கொடூர கொலைக்கு , என்கவுன்டர் சரியான தண்டனையே. இந்த தண்டனையால் குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு வகை பயம் ஏற்படும். தண்டனையை வரவேற்கிறேன்.

ஓட்டல் உரிமையாளர் ரமேஷ் சேலம் : இது மாதிரியான சம்பவங்களுக்கு இந்த தண்டனை தான் பொறுத்தமானது. கோர்ட்டுக்கு சென்றிருந்தால் கூட தண்டனை கிடைக்க தாமதமாகியிருக்கும்.

சிவசாமி(முன்னாள் பல்லாவரம் நகராட்சி கமிஷனர், சென்னை ) :  இரண்டு குழந்தைகளை கொலை செய்த கோவை சம்பவம் கொடுரமானது. பச்சிளம் குழந்தைகளை கொன்ற பாவிகளை வழக்கு, வாய்தா, விசாரணை என்று இழுத்தடிக்காமல் அப்போதே அடித்து கொன்றிருக்க வேண்டும். குற்றவாளிகள் போலீசாரை தாக்க முயன்ற  குற்றவாளிகளை என்கவுன்டரில் சுட்டு கொன்ற சம்பவத்தில் போலீசாரை பாராட்ட வேண்டும் என்றார்.

பாரதிகுமார்( அனகாபுத்தூர் நகராட்சி தலைவி, சென்னை) : குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க சட்டம் கடுமையாக்க வேண்டும். குழந்தைகளை கொன்றது உணர்ச்சிபூர்வமான விஷயம். இரண்டு குழந்தைகளை கொன்றது உணர்ச்சிபூர்வமான விஷயம்.  இரண்டு குழந்தைகளை பலிவாங்கிய பாவிகளை போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றது மகிழ்ச்சியாக உள்ளது.  குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோருக்கு இது சற்று ஆறுதல் அளித்தாலும்,   குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்றார்.

ரவிசந்திரன்( நுகர்வோர் பாதுகாப்பு பிரிதிநிதி, போரூர், சென்னை): குழந்தைகளை சுட்டு கொன்ற குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றது தவறு கிடையாது.  குற்றவாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்த போதும், கோர்ட்டிற்கு விசாரணைக்கு அழைத்துவந்த போதும் மக்கள் அவர்களை தாக்கும் அளவுக்கு இது உணர்ச்சிமயமான விஷயம்.  பொது மக்கள் போலீசாரிடம் குற்றவாளிகளை நடுவில் வீசுங்கள், மத்ததை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று உணர்ச்சிவயப்படும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை என்கவுன்டரில் சுட்டுகொன்றிருப்பது நல்ல விஷயம் என்று கூறினார்.

Comments

Jothi Soluions said…
Excellent work by the blog owner for all the tamil peoples around the world... Thanks...