ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா அம்புதான்-எய்தவரின் பதவியும் விரைவில் போகும்: ஜெ.

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா ஒரு அம்புதான். அவரை எய்தவரின் பதவியும் விரைவில் பறிபோகும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

என்னுடைய அறிக்கையால் தான் ராசா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக ஒரு இடத்தில் பதில் அளித்துள்ள கருணாநிதி, மற்றொரு இடத்தில் ஜெயலலிதா முதலில் சொன்ன தெல்லாம் ராசா மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் என்று தெரிவித்து, என்னுடைய விருப்பம் நிறைவேறாத அளவிற்கு தி.மு.க. தானாகவே முன் வந்து அமைச்சர் ராசாவை பதவி விலகச் செய்தது என்று கூறியிருக்கிறார். எல்லாமே ஒன்று தான்.

ராசா ராஜினாமா செய்யவில்லை என்றால், பதவியிலிருந்து விலக்கப்பட்டு இருப்பார். தன்னுடைய அறிக்கையின் மூலம், என்னால்தான் ராசா ராஜினாமா செய்தார் என்பதை ஒப்புக் கொண்டு இருக்கிறார் கருணாநிதி.

அடுத்தபடியாக, நாடாளுமன்ற கூட்டுக்குழுவினை அமைக்க வேண்டுமென்றோ, ராசாவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டு மென்றோ முதலில் நான் கோரவில்லை என்று கூறியிருக்கிறார் கருணாநிதி.

முதலிலேயே அனைத்தையும் கோர வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா என்ன? ஒன்றன் பின் ஒன்றாகத் தான் கோரப்படும் என்பதையும், இன்னும் கோருவதற்கு நிறைய இருக்கின்றன என்பதையும் கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை வேண்டாமென்று சொல்லவே இல்லை என்று கருணாநிதி தன்னுடைய கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தவறு செய்யவில்லை என்றால், இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி ஏன் மாற்றப்பட்டார் என்பதற்கு கருணாநிதி விளக்கம் அளிக்க முடியுமா?

உண்மையிலேயே இதில் எந்தத்தவறும் நடக்கவில்லை என்றால், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்குத் தயார் என்று எழுத்துப்பூர்வமாக மத்திய அரசிடம் தெரிவித்து, நாடாளுமன்றம் ஜனநாயக முறைப்படி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?

அதைச் செய்யாமல், பொருத்தமில்லாதவற்றை சுட்டிக்காட்டி உண்மையை வெளியிட்ட பத்திரிகைகளை வசைமாரி பொழிந்திருக்கிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் ராசாவின் பதவி பறிக்கப்பட்டுவிட்டது என்றாலும் அவர் ஒரு அம்பு தான். அந்த அம்பை எய்தவரின் பதவி பறிக்கப்படும் நாள் நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கடைசியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து நான் பதில் அளிக்கவில்லை என்று வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து கேட்க கருணாநிதிக்கு எந்தத்தகுதியும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் ஏற்கெனவே தெரிவித்து விட்டதை படிக்கவில்லை போலும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Comments