வட இலங்கைக்குச் செல்ல பிபிசி நிருபர்களுக்குத் தடை!

கொழும்பு: இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடுமையாக சண்டை நடந்த வன்னி உள்ளிட்ட வட இலங்கைப் பகுதிக்குச் செல்ல பிபிசி நிருபர்களுக்கு தடை விதித்துள்ளது இலங்கை அரசு.

இலங்கையில் போரின் போது ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷன் போர் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தி வருகிறது.

இதுபற்றி செய்தி சேகரிக்க பிரிட்டனின் பி.பி.சி. நிருபர்கள் குழு ஒன்று இலங்கை வந்திருந்தது. அவர்கள் விசாரணை கமிஷன் விசாரிக்கும் வட பகுதிகளுக்குச் செல்ல முற்பட்டனர்.

ஆனால் அவர்களுக்கு இலங்கை ராணுவ துறை அனுமதி மறுத்துவிட்டது.
போர் காலங்களில்தான் ராணுவத்திடம் அனுமதி பெற்று விட்டு வடபகுதிகளுக்கு செல்ல வேண்டும். தற்போது போர் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், மீண்டும் போர் வர வாய்ப்பே இல்லை என்றும் இலங்கை கூறி வருகிறது. ஆனாலும் இன்னும் ராணுவத்திடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை நீடிக்கிறது.

வட பகுதிக்கு செல்ல அனுமதி கிடைக்காததால் பி.பி.சி. நிருபர்கள் குழு கொழும்பு நகரிலேயே முடங்கி கிடக்கிறது. 2 மாதத்துக்கும் முன்பும் இதே போல பி.பி.சி. நிருபர்கள் குழு வடபகுதிக்கு செல்ல முயற்சித்தது. அப்போதும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பிறநாட்டு ஊடகக் குழுக்களுக்கும் அனுமதி மறுத்து வருகிறது இலங்கை.

Comments