கவர்னரை மாற்ற வேண்டாம்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: '' நான் விமர்சிக்கிறேன் என்பதற்காக கவர்னரை மாற்ற வேண்டாம் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்,'' என தி.மு.க.,வின் சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இம்மாநாட்டில் அவர் பேசியதாவது: ஒரே மதம், ஒரே மொழி ஒரே பண்பாடு, ஒரே உடை ஒரே உணவு என ஒற்றை பண்பாட்டை நோக்கி நாட்டை நகர்த்த பா.ஜ., பார்க்கிறது. இதற்காகதான் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டு வந்துள்ளது. காலப்போக்கில் ஒரே அரசு என்ற நிலையை உருவாக்கி மாநிலங்களை அழிக்க முயற்சி செய்கிறது.

பா.ஜ.,வை பொறுத்தவரை குறுகிய செயல்திட்டமாக இருக்காது. நீண்ட கால செயல்திட்டமாக தான் இருக்கும். தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என கூறுபவர்கள், ஒரே தேர்தல் என்ற நிலையை உருவாக்க நினைக்கின்றனர். இது ஒற்றையாட்சிக்கு தான் வழிவகுக்கும். ஒரே தனி மனிதருக்கு தான் அதிகாரத்தை கொண்டு சேர்க்கும்.இது பா.ஜ.,விற்கு கூட நல்லது அல்ல.பிரதமர் மோடி சர்வாதிகாரியாக ஆக்கத் தான் சட்டம் பயன்படும்

பா.ஜ., அதற்கு மூளையாக செயல்படும் அமைப்புகள் விரிக்கும் வலைகளில், அரசியல் காரணத்திற்காக ஆதரவு அளிக்கும் கூட்டணி கட்சிகள் விழுந்து விடக்கூடாது. இந்த சட்டத்திற்கு ஆதரவு தரக்கூடாது.பா.ஜ., அரசை ஆதரிப்பது கூட்டணி கட்சிகளின் தனிப்பட்ட விருப்பம். கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணான சட்டங்களை ஆதரிக்கக்கூடாது. கூட்டாட்சியை காக்க 'ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை இறுதி வரை எதிர்த்து ஆக வேண்டும்.

Comments