பெங்களூரு: வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிவரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் டுவீட் செய்த நடிகை கங்கனா ரணாவத் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மாநிலங்களில் காங்., எம்.பி., ராகுலும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டர் பேரணி நடத்தினார். இது குறித்து நடிகை கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: சிஏஏ-விற்கு (குடியுரிமை சட்டத்திற்கு) எதிரான தவறான தகவலை பரப்பி கலவரத்தை ஏற்படுத்திய நபர்கள், தற்போது வேளாண் சட்டத்திற்கு எதிராக தவறான தகவல்களை பரப்பி விடுகின்றனர். இதன்மூலம் தேசத்தில் பயங்கரவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்கள் பயங்கரவாதிகள். இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
இதுதொடர்பாக கர்நாடக நீதிமன்றத்தில் ரமேஷ் நாயகம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கங்கனா ரணாவத் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் உள்ள க்யாதசந்த்ரா காவல்நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டது.
Comments