கடலூர் தேர்தல் அதிகாரியை சரமாரியாக தாக்கும் அதிமுகவினர்.. வைரலாகும் வீடியோ

இரட்டை இலை ஒதுக்கீடு கடலூர்: சின்னம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி கடலூர் தேர்தல் அதிகாரியை அதிமுகவினர் தாக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் கடலூர் ஒன்றியத்திற்கு வரும் 27ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் என்பதுடன், வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடுவது மற்றும் சின்னம் ஒதுக்கும் பணியும் நேற்று தான் நடந்து முடிந்தது.

இந்த பணிகளில் கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு 12வது வார்டில் அதிமுக சார்பில் பிரியதர்ஷினி கணேஷ் என்ற பெண் வேட்பாளர் போட்டியிட்டார். இதேபோல் 21வது வார்டில் அதிமுக சார்பில் குமுதம் சேகர் என்ற பெண் வேட்பாளரும் போட்டியிட்டார். வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட போது அவர்களுக்கான இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதேநேரம் அதே வார்டுகளில் திமுக கூட்டணி சார்பில் சீனு மற்றும் வாணி ராணி ஆகியோர் போட்டியிட்டிருந்தனர். அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் அதிகாரி உத்தரவிட்டிருந்தார.

அப்போது அங்கு வந்த அதிமுக நிர்வாகி சேகர் உள்பட அதிமுகவினர் தேர்தல் அலுவலர் அருளரசனிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கீடு செய்தது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேரம் கடந்த நிலையில் அவர்களுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் உதயசூரியன் சின்னம் வழங்கக் கூடாது என்று கூறி அதிமுகவினர் தேர்தல் அலுவலரும் உதவி ஆட்சியருமான அருளரசனை தாக்க தொடங்கினர்.

இதனால் இதனால் அதிர்ச்சி அடைந்த அருளரசன் அருகிலிருந்த மற்றொரு தேர்தல் அலுவலர் அறைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் மற்றும் திமுக கூட்டணியினர் சின்னம் ஒதுக்கீடு செய்த பிறகு குழப்பம் நடப்பதாக கூறி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Comments