உதயநிதியை கைது செய்ய சென்ற போலீஸ்.. தடுத்து வாக்கு வாதம் செய்த தொண்டர்கள்.. சென்னையில் பரபரப்பு!

சட்டப்படி குற்றம் சென்னை: சென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய சென்ற போலீசாருடன் திமுகவினர் வாக்குவாதம் செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் எதிர்கட்சித் தலைவர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகம் முழுக்க திமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதில் சட்ட நகலை எதிர்த்து திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போராட்டம் செய்தார். 2000 திமுகவினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் முதலில் கண்டன பேரணியாக மட்டுமே நடப்பதாக இருந்தது. ஆனால் கூட்டம் கூட ஆர்ப்பாட்டமாக மாறியது. முதலில் 300 பேர் மட்டுமே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதன்பின் மக்களும் இதில் கலந்து கொண்டனர். மொத்தமாக 2000 பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் இந்தியாவை பிரிக்காதே, மக்களை பிரிக்காதே என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது . அதேபோல் மோடி ஒழிக, அமித் ஷா ஒழிக என்றும் உதயநிதி ஸ்டாலின் கோஷம் போட்டார். உதயநிதியை தொடர்ந்து திமுகவினர் பலரும் மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.

இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் குடியுரிமை சட்ட நகலை கிழித்து போட்டார். நிறைய நகல்களை கிழித்து அவர் தொண்டர்களை நோக்கி வீசினார். தொண்டர்களும் தங்களிடம் இருந்த சட்ட நகலை கிழித்து எறிந்தனர். இன்னும் சிலர் நகலுக்கு தீ வைத்து போராட்டம் செய்தனர்.

ஒரு சட்ட நகலை கிழிப்பது சட்டப்படி குற்றமாகும். இதனால் உதயநிதியை கைது செய்ய போலீசார் முயன்றனர். ஆனால் திமுக தொண்டர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. அங்கிருந்த திமுக தொண்டர்கள் உதயநிதியை கைது செய்ய விடமால் தடுத்து போலீசாருடன் வாக்கு வாதம் செய்தனர்.

இதையடுத்து போலீசார் வேகமாக திமுக தொண்டர்களை கைது செய்தனர். இதனால் உதயநிதி தானாக கீழே இறங்கி போலீசாருடன் சென்றார். போலீசார் அவரை கைது செய்து அரசு பேருந்தில் அழைத்து சென்றனர். ஆனால் உதயநிதி இன்று மாலைக்கு வெளியாக வாய்ப்புள்ளது.

Comments