திருமா.வை கைது செய்ய வேண்டும்.. கோபப்பட்ட எச்.ராஜா.. அப்ப தீட்சிதரை என்ன செய்யலாம்.. மக்கள் கேள்வி

சென்னை: "சிவன், பெருமாள் கோயில்களை இடிப்பேன், தகர்ப்பேன் என்று பேசிய அன்றே திருமாவளவனை கைது செய்திருக்க வேண்டும்" என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார். தீயசக்திகளின் ஒட்டுமொத்த உருவம் திருமாவளவன் என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றும் எச்.ராஜா ட்வீட் போட்டு கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் "சிதம்பரம் கோயிலில் இந்து பெண்ணை அடித்த அர்ச்சகரை என்ன பண்ணலாம்? என்று எச்.ராஜாவிடம் ட்விட்டர்வாசிகள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

"சனாதன கல்வியை வேரறுப்போம்" என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் பேசியபோது, "கூம்பு வடிவில் இருந்தால் அது மசூதி, அதிக நீளம் கொண்டிருந்தால் அது தேவாலயம், அசிங்கமாக சிலைகள் இருந்தால் அது இந்து கோவில்கள்" என்று தெரிவித்திருந்தார்.

திருமாவளவனின் இந்த பேச்சு இந்து மதத்தை கேவலப்படுத்தும் விதமாகவும், இந்துக்களின் மனதை புண்படுத்தும்படியாக உள்ளதாகவும் சொல்லி, தங்கள் அதிர்ச்சியையும்,கோபத்தையும் வெளிப்படுத்தியும் வருகின்றனர்.

பெண்ணின் கன்னத்தில் அறைந்த அர்ச்சகர்.. தலைமறைவாகி தப்பி ஓட்டம்.. 2 மாதம் பூசை செய்ய தடை!

மேலும் இந்துமதத்தையும் ஆன்மீக நம்பிக்கைகளையும் அவதூறு, ஏளனம் செய்து பேசி வரும் திருமாவளவனின் பேச்சினை கண்டிக்கும் பொருட்டு, இந்து மத நம்பிக்கையாளர்கள் பல்வேறு வகையில் சோஷியல் மீடியாவில் தங்கள் எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர்.. மற்றும் சிலர் போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்களை கொடுத்தபடியே உள்ளனர்.

இந்து கோயில்கள் குறித்து பேசியதற்கு ஏற்கனவே திருமாவளவன் வருத்தம் தெரிவித்து வீடியோவும் வெளியிட்டிருந்தார். ஆனாலும் அதை இந்துமத தரப்பில் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை போல தெரிகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே தொடர்ச்சியாக கண்டனங்களை பதிவிட, அதற்கு விசிக தரப்பும் பதிலுக்கு கருத்துக்களை பதிவிட்டு வருவதால், சோஷியல் மீடியாவில் ஒரு பரபரப்பு சூழல் அவ்வப்போது வெளிப்படுகிறது.

இந்த நிலையில் திருமாவளவன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். இது சம்பந்தமாக ட்வீட் போட்டுள்ள அவர், "இந்து கோவில்கள் குறித்து இழிவாக பேசிய தீயசக்திகளின் ஒட்டுமொத்த உருவம் திருமாவளவன் மீது தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயில்களை இடிப்பேன் தகர்ப்பேன் என்று பேசிய அன்றே இவரை கைது செய்திருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

எச்.ராஜாவின் இந்த ட்வீட்டுக்கு ஆதரவும், எதிர்ப்பும் என மாறி மாறி கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. இருந்தாலும், சிதம்பரம் கோயிலில் இந்து பெண்ணை அடித்த அர்ச்சகரை என்ன பண்ணலாம்? என்று எச்.ராஜாவிடம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Comments