அவமானப்படுத்திவிட்டீர்கள்.. மக்கள் உங்களுக்கு பாடம் கற்பிப்பார்கள்.. பொறிந்து தள்ளிய அமித் ஷா

எல்லாம் ஆசை மும்பை: மகாராஷ்டிராவில் மக்கள் கொடுத்த தீர்ப்பை சிவசேனா மதிக்கவில்லை, சிவசேனா அவர்களை அவமானப்படுத்திவிட்டது என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டிவிட் செய்து விமர்சனம் செய்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நாளை சிவசேனா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்க உள்ளது. அங்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார்.அஜித் பவாரின் அரசியல் பல்டி காரணமாக அங்கு பாஜக ஆட்சி கவிழ்ந்தது. கடைசி நேரத்தில் அஜித் பவார் ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்கியதால் அங்கு பாஜக ஆட்சி கவிழ்ந்தது.

இந்த நிலையில் சிவசேனா குறித்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா டிவிட் செய்து விமர்சனம் செய்துள்ளார். அதில், மகாராஷ்டிராவில் மக்கள் கொடுத்த தீர்ப்பை சிவசேனா மதிக்கவில்லை.

அவர்களை அவமானப்படுத்திவிட்டது. எம்எல்ஏக்களை ஹோட்டல்களில் அடைத்து வைத்து, தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை உடைத்து, தற்போது பாஜகவை அவர்கள் குறை கூறுகிறார்கள். தங்கள் கொள்கையில் இருந்து முரண்பட்டு, 3 கட்சிகளும் தவறான கூட்டணியை அமைகிறது.

நாங்கள் சிவசேனா கட்சிக்கு முதல்வர் பதவி கொடுப்போம் என்று எந்த விதமான உத்தரவாதமும் கொடுக்கவில்லை என்பதை நான் மீண்டும் உறுதியாக கூறுகிறேன். ஆதித்யா தாக்கரே, உத்தவ் தாக்கரேவுடன் நாங்கள் நடத்திய மீட்டிங்கில் கூட இதை பற்றி பேசவில்லை. அப்போதெல்லாம் நாங்கள் தேவேந்திர பட்னாவிஸ் குறித்துதான் பேசினோம்.

ஆனால் அப்போதெல்லாம் சிவசேனா எங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எங்களுடன் சேர்ந்துதான் சிவசேனா எம்எல்ஏக்கள் எல்லோரும் வெற்றிபெற்றார்கள். பிரதமர் மோடியின் புகைப்படத்தை பயன்படுத்தாத ஒரு சிவசேனா வேட்பாளரை கூட நீங்கள் பார்க்க முடியாது. அவர்களின் பிரச்சார கூட்டத்தில் மோடியின் பெரிய கட் அவுட்களை பயன்படுத்தினார்கள்.

இதெல்லாம் மகாராஷ்டிரா மக்களுக்கும் தெரியும், இந்திய மக்களுக்கும் தெரியும். சிவசேனா பேராசையுடன் செயல்படுகிறது. முதல் பதவி மீதான ஆசை காரணமாக அவர்கள் தங்கள் மனதை மாற்றிக்கொண்டனர். 104 இடங்கள் இருக்கும் நாங்கள் ஆட்சி செய்ய முடியாமல், 56 இடங்கள் உள்ள சிவசேனா ஆட்சி செய்வதுதான் உண்மையான குதிரை பேரம், என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

Comments