அயோத்தி நிலம் தீர்ப்பு:பாதுகாப்பு நடவடிக்கை தயார்

அயோத்தி, நிலம், உ.பி போலீஸ், சுப்ரீம் கோர்ட், தீர்ப்பு, ஓ.பி. சிங்,, கோகாய்லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், 'தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன' என, மாநில போலீஸ் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்கு, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை, ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வரும், 17ல் ஓய்வு பெறுகிறார். அதனால், அதற்கு முன் தீர்ப்பு வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உ.பி., போலீஸ் டி.ஜி.பி.,யான, ஓ.பி. சிங் கூறியதாவது: நாங்கள் பாதுகாப்பு விஷயத்தில் தயாராக உள்ளோம். எந்த நிலையிலும், குறிப்பிட்ட சிலர் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டோம். உளவுப் பிரிவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். சட்டம் - ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் யார் செயல்பட்டாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால், மிகவும் கடுமையான, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

அயோத்தி மாவட்ட கலெக்டர் அனுாஜ் குமார் ஜா, கூறியதாவது: அயோத்தி வழக்கில், தீர்ப்பு விரைவில் வெளிவர உள்ளது. இந்நிலையில், மதநல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்படக் கூடாது. குறிப்பாக சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பகிர்ந்து கொள்வது, அதை மற்றவர்களுக்கு அனுப்புவது போன்றவற்றில் ஈடுபட வேண்டாம்.ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக செய்திகள் பரப்புவதை தவிர்க்க வேண்டும். இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதை மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். இந்நிலையில், 'சமூக ஒற்றுமை, அமைதிக்கு எதிராக புரளிகள் பரப்புவதை தவிர்க்க வேண்டும்' என, உ.பி.,யில் உள்ள முஸ்லிம்கள் கல்வி நிறுவனமான, ஏ.எம்.யு., எனப்படும், அலிகர் முஸ்லிம் பல்கலை துணை வேந்தர் தாரிக் மன்சூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: அயோத்தி தீர்ப்பு வெளியாகும் நேரத்தில், நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை உலக நாடுகள் உற்று கவனிக்கும். பல்வேறு மதத்தினர், சமூகத்தினர் ஒற்றுமையாக வாழும் நம் பாரம்பரியத்தை நாம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். சட்டத்தை மதித்து அனைத்து தரப்பினரும் அமைதியுடன் இருக்க வேண்டும். வீண் புரளிகள் பரப்புவதை தடுக்க வேண்டும். பொறுப்புள்ள சமூகம் என்பதை நாம் அனைவரும் நிரூபிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Comments