உள்ளாட்சி தேர்தலை தடுக்க வேண்டும் என்று திமுக நினைக்கவில்லை.. முறைப்படி நடத்துங்கள்.. உதயநிதி

உதயநிதி கருத்து திருச்சி: உள்ளாட்சி தேர்தலை தடுக்க வேண்டும் என்று திமுக நினைக்கவில்லை. முறைப்படி நடத்துங்கள் என்று தான் கூறுகிறோம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு கடந்த 2016ம் ஆண்டு வெளியான நிலையில், பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு வழக்கின் காரணமாக மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் வரும் டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் உரிய சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்யக்கோரி தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையிட்டுள்ளது.

இதனால் உள்ளாட்சி தேர்தல் வருவதை திமுக தடுக்க நினைப்பதாக தகவல்கள் பரவியது, இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் அவரது மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் இதே கருத்தையே தெரிவித்துள்ளார்.

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டத்தின் நிர்வாகிகள் நேர்காணலில் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் விவரங்களையும், திமுக போராட்டங்களில் அவர்கள் கலந்து கொண்டவர்களையும் உதயநிதி கேட்டறிந்தார். அதற்கு முன்னதாக இந்த நேர்காணலில் கலந்து கொள்ள வந்த உதயநிதி ஸ்டாலின் கலைஞர் அறிவாலயம் வாயிலில் செய்தியாளர்களிடம் பேசும் போது, உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம். உள்ளாட்சி தேர்தலை தடுக்க வேண்டும் என்று திமுக நினைக்கவில்லை. முறைப்படி நடத்துங்கள் என்று தான் கூறுகிறோம் என்றார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நேரு, எம்எல்ஏ மகேஷ்பொய்யாமொழி, மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments