குருமூர்த்தியின் பேச்சு திமிர்வாதத்தின் உச்சம், ஆணவத்தின் உச்சம் - ஜெயக்குமார்

ஜெயக்குமார் சென்னை: குருமூர்த்தியின் பேச்சு திமிர்வாதத்தின் உச்சம் என்றும் ஆணவத்தின் உச்சம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடந்த 2016-இல் ஜெயலலிதா மறைந்தவுடன் முதல்வராக ஓபிஎஸ் பொறுப்பேற்றார். இதையடுத்து 2017- ஆம் ஆண்டு தொடக்கத்தில் தனது பதவியை அவர் ராஜினாமா செய்ததுடன் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தத்தை நடத்தினார். இதற்காக மறைந்த ஜெயலலிதாவின் சமாதியில் அவர் தியானம் இருந்தார். மேலும் தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாக பரபரப்பு பேட்டியையும் அளித்தார். இதையடுத்து அதிமுக இரண்டாக பிரிந்தது. அதில் ஒன்று ஓபிஎஸ் தலைமையிலும் மற்றொன்று சசிகலா தலைமையிலும் இயங்கியது.

பின்னர் சசிகலா சிறை சென்றது, அதிமுக ஒன்றிணைய வேண்டுமானால் சசிகலா, தினகரனை ஒதுக்கி வைப்பது என ஓபிஎஸ் நிர்பந்தித்தது, பின்னர் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து ஓபிஎஸ் துணை முதல்வரானது உள்பட அனைத்தும் அறிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் தற்போது துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தற்போது ஒரு பெரும் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் நான் கூறியதாலேயே ஜெயலலிதாவின் நினைவிடத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் அப்போது தியானம் மேற்கொண்டார்.

ஓபிஎஸ் தியானம் செய்ததன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டது, பிரிந்து கிடந்த அதிமுகவை நான்தான் ஒருங்கிணைத்தேன் என குருமூர்த்தி தெரிவித்திருந்தார். இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் துணை முதல்வர் ஓபிஎஸ் குறித்த குருமூர்த்தியின் பேச்சு ஆணவத்தின் உச்சம்.

குருமூர்த்தியின் பேச்சு திமிர்வாதத்தின் உச்சம், இவ்வளவு திமிர் கூடாது; நாவடக்கம் தேவை. அதிமுகவின் மீது கைவைத்து வாங்கிக் கட்டிக் கொண்ட வரலாறும் குருமூர்த்திக்கு உண்டு என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Comments