ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்த பாஜக.. ஒரே பதவிப்பிரமாணம்.. சிவசேனா, காங், என்சிபிக்கு நோஸ் கட்!

கரியை பூசியது மும்பை: ஒரே கல்லில் 2 மாங்காய் என்றுதான் பார்த்திருக்கிறோம்... ஆனால் மகாராஷ்டிராவில் ஒரே கல்லில் 3 பேருக்கு நோஸ் கட் கொடுத்துள்ளது பாஜக! இது யாரும் எதிர்பாராத திருப்பம்தான்!!
சிவசேனாவும், பாஜகவும் மகாராஷ்டிராவில் என்னதான் அடித்துக் கொண்டாலும் பிடித்தாலும் கூட நேச்சுரல் பார்ட்னர்ஸ்.. அதாவது இயற்கையாகவே இருவருக்கும் பொருந்தி போகும். காரணம் இந்துத்வா மீது இருவருக்கும் பிடித்தம் அதிகம்.. அதுதான் அவர்களின் அடித்தளமும் கூட.

எனவே நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலிலும் கூட இரு கட்சிகளும் கூட்டணி வைத்து போட்டியிட்டன. அதற்கு முன்பு நடந்த சண்டைகள் உலகறிந்தவைதான். ஆனால் தேர்தலின்போது மட்டும் இருவரும் ஒட்டிக் கொள்வார்கள். பாசம் காட்டிக் கொள்வார்கள்.

நடந்த சட்டசபைத் தேர்தலிலும் இருவரும் கூட்டணி வைத்து கூட்டணியாக பெரும்பான்மை பலத்தை பெற்றனர். ஆனால் சிவசேனா இங்குதான் தனது வேலையைக் காட்டியது. இதனால் பாஜக அதிர்ச்சி அடைந்தது. கெஞ்சி பார்த்தது.. மிரட்டி கூட பார்த்தது. ஆனால் சிவசேனா வழிக்கு வரவில்லை.

இந்த இடத்தில்தான் தேசியவாத காங்கிரஸ் நூல் விட்டு பார்த்தது. சிவசேனாவும் தேசியவாத காங்கிரஸுடன் பேசி பார்த்தது. இது பாஜகவை கோபமடைய வைத்தது. எப்படி தமிழகத்தில் திமுக, அதிமுகவுடன் ஒரே நேரத்தில் தேமுதிக முன்பு பேரம் பேசியதோ அதேபோல பாஜகவுடன் ஒரு பக்கம், தேசியவாத காங்கிரஸுடன் மறுபக்கம் என அலைபாய்ந்தது சிவசேனா.

சிவசேனாவின் இந்த சேட்டையை அமைதியாகவே வேடிக்கை பார்த்தது பாஜக. அதேசமயம், தேசியவாத காங்கிரஸுக்கு எப்படியாவது ஆட்சியமைக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் காங்கிரஸுக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை. எனவே ஒதுங்கியிருக்கவே பார்த்தது. ஆனால் சரத் பவார் விடவில்லை.

டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். நாம் எப்படியாவது ஆட்சியமைக்க வேண்டும். இது நல்ல சான்ஸ். விடக் கூடாது. மீண்டும் பாஜக வந்து விட்டால் அனைவருக்கும் சிரமம், குறிப்பாக வழக்குகள் அது இது என்று என்னையும் படுத்தி எடுத்து விடுவார்கள் என சொல்லிப் பார்த்தார். இதை காங்கிரஸும் புரிந்து கொண்டது. சோனியா சரி என்று சம்மதித்தார்.

எல்லாம் நல்லபடியாக முடிந்த நிலையில்தான் பாஜக தனது அதிரடியைக் காட்டியது. இரவோடு இரவாக காட்சிகள் மாறின. இன்று காலை முதல்வராகி விட்டார் பட்னவீஸ். துணை முதல்வராகி விட்டார் அஜீத் பவார். இதன் மூலம் ஒரே கல்லில் 3 பேரை சாய்த்துள்ளது பாஜக.

தனக்கு துரோகம் இழைத்த சிவசேனா ஆட்சியமைக்க விடாமல் பாஜக தடுத்து விட்டது... சிவசேனாவுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பளித்த தேசியவாத காங்கிரஸை உடைத்து விட்டது... துணைக்குப் போன காங்கிரஸுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டது... இப்படி மொத்தமாக 3 கட்சிகளின் முகத்திலும் கரியை பூசியுள்ளது பாஜக... தனது அரசியல் சாணக்கியத்தனத்தையும் நிரூபித்து விட்டது!

Comments