குரங்கணி காட்டுத் தீ : 9 பேர் பலி

குரங்கணி, காட்டுத்தீ, அமைச்சர் விஜயபாஸ்கர்போடி : தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் டிரக்கிங் சென்ற 36 பேர் காட்டுத்தீயில் சிக்கினர். இவர்களில் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

காட்டுத் தீ சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், குரங்கணி வனப்பகுதிக்கு நேற்று 39 பேர் டிரக்கிங் சென்றுள்ளனர். இவர்களில் 12 பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். 27 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். காட்டுக்குள் டிரக்கிங் சென்று கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உள்ளனர். இதனால் இருள் சூழ்ந்ததால் சிலர் அங்கும் இங்கும் சிதறி ஓடி உள்ளனர். இதில் சிலர் பள்ளத்தாக்குகளுக்குள் விழுந்துள்ளனர். வனத்துறை, தீயணைப்பு துறை, சிறப்பு காவல் படையினர் விரைந்து செயல்பட்டதால் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 6 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும், 6 பேர் தேனி அரசு மருத்துவமனையிலும், 3 பேர் மதுரை தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பள்ளத்தாக்குகளுக்குள் சிக்கிய 9 பேர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். வனப்பகுதிக்குள் சடலங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Comments