
இந்த நிதியாண்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி, மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் என்னென்ன மாற்றங்கள் என்று ஏராளமான எதிர்பார்ப்புகளுடன் மத்திய பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் குறைந்த பட்சம் வருமான வரி விலக்கு உச்சவரம்பிலாவது மாற்றம் இருக்கும் என்று சம்பளதாரர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் வர்த்தகர்கள் செலுத்தும் வரியை விட மாத சம்பளம் பெறுவோரின் வரி வருவாயே அதிக அளவில் இருப்பதாக அருண் ஜேட்லி பட்ஜெட்டில் சுட்டிக்காட்டினார். 85.51 லட்சம் பேர் புதிதாக வருமான வரி தாக்கல் செய்திருப்பதாகவும் கூறினார். 2017-18ம் நிதியாண்டில் நேரடி வரி 12.6 சதவீதமாகவும், மறைமுக வரி 18.7 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாக கூறினார்.
மாத சம்பளதாரர்களுக்கு ஏமாற்றம்
தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை, வருமான வரி விலக்கு உச்சவரம்பானது ரூ. 2.50 லட்சம் என்ற அளவிலேயே தொடரும் என்றும் அறிவித்துள்ளார். பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் மாத சம்பளம் பெறுவோரின் செலவுகளும் அதிகரித்துள்ள நிலையில் வருமான வரி விலக்கு உச்சவரம்பை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.
ஜனாதிபதி முதல் ஆளுநர் வரை சம்பள உயர்வு
ஆனால் மத்திய பட்ஜெட்டில் குடியரசுத் தலைவரின் சம்பளம் ரூ. 1.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாகவும், துணை குடியரசுத் தலைவரின் மாத ஊதியம் ரூ. 1.25 லட்சத்தில் இருந்து ரூ. 4 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. இதே போன்ற ஆளுநர்களின் சம்பளமும் ரூ. 1.10 லட்சத்தில் இருந்து ரூ. 3.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எம்பிகள் சம்பள உயர்வுக்கும் உறுதி
ஏற்கனவே குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட பங்களாக்களில் தான் அவர்கள் வசித்து வருகின்றனர். இதில் அவர்களுக்கு எந்த செலவும் கிடையாது அவர்களுக்கான சிலிண்டர் முதல் மின்கட்டணம் வரைஅனைத்தையுமே அரசு செலுத்திவிடும். ஆனால் அவர்களுக்கான மாத சம்பளம் லட்சங்களில் இது மட்டுமல்ல பணவீக்கத்தை பொறுத்து எம்பிக்களின் சம்பளமும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தானாக உயர்த்தப்படும் என்று அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
எம்பிகளுக்கு எண்ணிலடங்கா சலுகைகள்
நீதிபதிகளின் சம்பளம் உயர்த்தப்பட்ட போது தங்களின் சம்பளமும் உயர்த்தப்பட வேண்டும் என்று எம்பிக்கள் கோரிக்கை விடுத்தன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிகள் தவிர நியமன எம்பிகளும் உள்ளனர். இதில் சில பிரபலங்களுக்கும் எம்பி பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரபலமாக பல கோடிகளை குவித்து வைத்துள்ளவர்களுக்கு இனி மாத சம்பளத்திலும் உயர்வு கிடைக்கும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. இது தவிர எம்பிகளுக்கு கார் படி, ரயில், விமான பயணத்தில் சலுகை என்று ஏராளமான சலுகைகளும் இருக்கின்றன.
எம்.பி, எம்எல்ஏ என்றால் லட்சாதிபதி
மத்திய பட்ஜெட் மட்டுமல்ல, மாநில பட்ஜெட்டும் எம்எல்ஏக்களின் சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தி எம்எல்ஏக்களை லட்சாதிபதிகளாக்கி இருக்கிறது. மொத்தத்தில் வாக்களித்த மக்கள் வரி வரி என்று தாவு தீர வரி கட்டிக் கொண்டிருக்க எம்.பிகள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரின் சம்பளங்கள் வானுயர பரப்பதே பட்ஜெட்டுகள் மக்களுக்கு உணர்த்தும் உண்மை.
Comments