சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் ஸித்தி அடைந்தார்

காஞ்சிபுரம் : உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் சங்கரமடம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை ஸித்தி அடைந்தார்.

மூச்சு திணறல் காரணமாக சங்கரமடம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அவர் அனுமதிக்கப்பட்டார். பல நாட்களாக மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் ஸித்தி அடைந்தார்.

நாளை நல்லடக்கம்

ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உடல் நாளை(மார்ச்1) அன்று காஞ்சி சங்கரமடத்தில் உள்ள மகா சுவாமிகள் பிருந்தாவனத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

வாழ்க்கை வரலாறு :

1935ம் ஆண்டு ஜூலை 18 ம் தேதி, திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கி கிராமத்தில் பிறந்த ஜெயேந்திரரின் இயற்பெயர் சுப்ரமணிய மகாதேவ ஐயர். 84 வயதாகும் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் தனது 19வது வயதில் காஞ்சி மடத்தின் இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்றார். ஜெயேந்திரர் 1954ம் ஆண்டு மார்ச் 22 ம் தேதி இளைய பீடாதிபதியாக, ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

பின்னர் 1994ம் ஆண்டு காஞ்சி மடத்தின் 69வது மடாதிபதியாக ஜெயேந்திர சுவாமிகள் பொறுப்பேற்றார். இவரின் புரோகிதத்தன்மையாலும் ஆழ்ந்த புலமையாலும் இந்து சமயத்தினரிடையே செல்வக்குடையவராகத் திகழ்கிறார். அயோத்தி பிரச்னைக்கு தீர்வு காண சமரச முயற்சியிலும் ஈடுபட்டார்.

Comments