பிற்பகல் வர்த்தகத்தின் போது, ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பை எதிர்கொண்டது. அத்துடன் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் பெற்ற நிகரலாபம் குறித்த அறிக்கையை முக்கிய நிறுவனங்கள் பலவும் அறிவித்தன. இதில் சில நிறுவன நிகரலாபம் உயர்ந்திருந்த போதிலும், இருசக்கர மற்றும் 3 சக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழும் பஜாஜ் ஆட்டோ, எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் விளங்கும் வேல்பூல் போன்ற நிறுவனங்கள் காலாண்டு நிகரலாபம் எதிர்பார்த்ததை விட வீழ்ச்சி அடைந்துள்ளதாக அறிவித்தன.
இதன் காரணமாக பகல் 2.35 மணியளவில் சென்செக்ஸ் 699.62 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்தது. நிப்டியும் 210.50 புள்ளிகள் வரை சரிந்தது. பகல் 3.05 மணியளவில், அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி சீரமைப்பு முறைகள் காரணமாக கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருவதாக ஜெர்மனியின் மிகப் பெரிய வங்கியான டாய்சி வங்கி அறிவித்தது. இதன் விளைவாக 3.30 மணியளவில் சென்செக்ஸ் 800 புள்ளிகள் வரை சரிந்தது.
ஆட்டோ, உலோகம்,வங்கித்துறை பங்குகள் கடுமையாக சரிந்ததால் இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 839.91 புள்ளிகள் சரிந்து 35,066.75 புள்ளிகளாகவும், நிப்டி 256.30 புள்ளிகள் சரிந்து 10,760.60 புள்ளிகளாகவும் இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் 5 வது முறையாக இந்திய பங்குச்சந்தைகள் ஒரே நாளில் மிக கடுமையான சரிவை இன்று சந்தித்துள்ளன.
Comments