கனமழை பதிவு:
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் அளித்த பேட்டி:
மேற்கு திசை காற்றில் ஏற்பட்ட வேக மாறுபாடு மற்றும் வெப்பசலனம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக செஞ்சியில் 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
சென்னையில்...:
அடுத்த 5 தினங்களை பொறுத்தவரை, செப்., 1 முதல் 5 வரை காலகட்டத்தில் ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்று, தமிழக வளிமண்டலத்தில் வீச வாய்ப்பு உள்ளது. இதனால், தமிழகத்தின் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென், வடதமிழக மாவட்டங்களின் உள் பகுதியில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அதிகம்:
ஜூன் 1 முதல் ஆகஸ்ட்31 வரை காலகட்டத்தில், தென்மேற்கு பருவமழை 25 செ.மீ., பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 23 சதவீதம் அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.
Comments