முதல்வர் பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., அரசு மீது, சமீபத்தில், நடிகர் கமல் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். 'குற்றச் சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா... ஆதாரம் இல்லாமல் கமல் பேசக் கூடாது. அவர் மீது அவதுாறு வழக்கு தொடர்வோம்'என, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நேற்று முன்தினம் கூறினார்.
அதுபோல, 'கமல் ஒரு ஆளே கிடையாது' என, அமைச்சர் அன்பழகனும், 'கமல் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என, அமைச்சர் சி.வி.சண்முகமும் தெரிவித்தனர். தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கமலுக்கு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளார்.இது குறித்து ஸ்டாலின் கூறியதாவது: மக்கள் கருத்தை பிரதிபலித்த கமலை, சட்டத்தை காட்டி அமைச்சர்கள் மிரட்டுகின்றனர். ஆட்சியாளர்கள் தங்கள் மீதான விமர்சனங்களில் உள்ள உண்மை களை தெரிந்து, தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும்; அது தான் ஜனநாயக ஆட்சி.
கமல் மீது வன்மம் கொண்டு கருத்துதெரிவித்து, விமர்சிப்பது, ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல். கமலின் கருத்து, தமிழக மக்களின் ஒட்டு மொத்த கருத்தாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். உடனே, கமல் தன், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், 'அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு, நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.
என் ஆதங்கங்களில் பல உங்கள் கோப செய்தி யிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே. ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர், தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது', என தெரிவித்துள்ளார்.
Comments