நாட்டின் 14-வது ஜனாதிபதி யார்? திங்களன்று தேர்தல்- ஏற்பாடுகள் மும்முரம்!

 வாக்களிக்க ஏற்பாடுகள் டெல்லி: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாட்டின் 14-வது ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் குறித்து ஆளும் கட்சியான பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்டவைகளும் தீவிரமாக ஆலோசித்தன. வேட்பாளரை வெளியிடுவதற்கு முன்னரே ஊடகங்களில் எத்தனை எத்தனை யூகங்கள் வெளிவந்தன. அவற்றை எல்லாம் பொய்யாகி பாஜக பீகார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக அறிவித்தது.

எதிர்க்கட்சிகளும்... அதேபோல் ஆளும் கட்சி வேட்பாளருக்கு எதிராக தம் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற அளவுக்கு எதிர்க்கட்சிகளும் தீவிரமாக யோசித்தன. அவர்கள் தரப்பிலும் வேட்பாளர் குறித்து பல்வேறு ஊகங்கள் உலவின.

மீராகுமார் இந்நிலையில் பாஜக எடுத்த பிரம்மாஸ்திரத்தை எதிர்க்கட்சிகளும் கையில் எடுத்தன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் மீராகுமாரை வேட்பாளராக அறிவித்தன. இவர் முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன் ராமின் மகளாவார்.

யார் யார் ஆதரவு ராம்நாத் கோவிந்தை பொருத்தவரை அதிமுகவின் இரு அணிகளும், சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், லோக் ஜன சக்தி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தருகின்றன. மீராகுமாரை பொருத்தவரை காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு உள்ளன.

வாக்களிக்க ஏற்பாடுகள் இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்காக நாடாளுமன்றம் மற்றும் தலைமை செயலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 4,896 எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நாள் ஜூலை 20 ஆகும்.

Comments