அதிமுகவை மீட்போம்: டில்லியில் ஓ.பி.எஸ்., பேட்டி

புதுடில்லி: தொண்டர்கள் இயக்கமாக அதிமுகவை மீட்டெடுப்போம். இதற்காக பாடுபட்டு வருகிறோம் என முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., கூறியதாவது: இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி மேலும் ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளோம். ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா குறித்தும், அங்கு கைப்பற்றப்பட்ட பணம் குறித்தும் விசாரணை துரிதபடுத்த வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற தினகரன், சுகேஷ் மீதான விசாரணையை துரிதபடுத்த வேண்டும் அதிமுக பொது செயலராக நியமன முறையில் தேர்வு செய்யப்பட்ட சசி பணியாற்ற தார்மீக உரிமை கிடையாது. அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் சசியால் நியமிக்கப்பட்டார். இதனால், சீனிவாசன் வங்கி பணத்தை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். சீனிவாசன் நியமனம் தவறானது. கட்சி பணத்தை கையாள சீனிவாசனுக்கு உரிமையில்லை .பயன்படுத்துவது குற்றமாகும்.

ஆமைவேகத்தில்....:

ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டபின்னர் தான் யாருக்கு ஆதரவு என முடிவு அறிவிக்கப்படும். தொண்டர்களின் இயக்கமாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. இதனை அவர்கள் சொல்லவில்லை. மக்கள் இயக்கமாக அதிமுகவை மீட்டெடுப்போம். அதிமுகவில் யார் கை ஓங்கியிருக்கிறது என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். மக்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். நிர்வாகிகள் தான் அவர்கள் பக்கம் உள்ளனர். எங்களுடைய தர்ம யுத்தத்தின் அடிப்படை கோட்பாட்டிலிருந்து விலகவில்லை. ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் அதிமுக சென்று விடக்கூடாது. இரு அணிகளுக்கு இடையேயான பேச்சு ஆமை வேகத்தில் செல்கிறது. பேச்சுவார்த்தைக்கான தடைக்கு யார் காரணம் என்பது மக்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

உடன் வந்த முனுசாமி கூறியதாவது: அதிமுக, தற்போது திவாகரன் மற்றும் அவரது வாரிசுகள் கட்டுப்பாட்டில் உள்ளது. போயஸ் கூட்டம் அவர்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. மக்களை பற்றி ஆட்சி செய்பவர்கள் சிந்திக்கவில்லை. பன்னீர் சிந்திக்கிறார். தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ரஜினி அரசியலுக்கு வந்தால் தான் களத்தில் இருக்கும் பிரச்னை தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments