கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு

புதுடில்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குபதிவு செய்துள்ளனர். 
மும்பையைச் சேர்ந்த, 'ஐ.என்.எஸ்., மீடியா' என்ற, 'டிவி' நிறுவனத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து, 305 கோடி ரூபாய் முதலீடு கிடைத்தது. இதை, 4.62 கோடி ரூபாயாக குறைத்துக் காட்ட, 2007ல், உதவி செய்ததாகவும், அதற்காக ஆதாயம் பெற்றதாகவும், ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் மீது புகார் எழுந்தது. இது குறித்து, கார்த்தி சிதம்பரம் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. அதை தொடர்ந்து, சில தினங்களுக்கு முன், சென்னையில் உள்ள அவரது வீடு உட்பட, நாடு முழுவதும், 16 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கிடையில், 2015 டிசம்பரில், கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில், வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை தொடர்பாக, மத்திய அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. 

இது தொடர்பாக, அவர் மீது மேலும், நான்கு வழக்குகள் பதிவு செய்ய, சி.பி.ஐ.,க்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியானது . இந்நிலையில், லண்டன் சென்றுள்ள கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments