தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது : கர்நாடகா

பெங்களூரு : தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் குடிப்பதற்கு காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து திறந்து விடுவது தொடர்பாக, தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகரன், முதல்வரின் முதன்மை செயலாளர் தீபக் மீனா, நீர்வளத்துறை முதன்மை செயலாளர் பவீந்திர ரெட்டி, காவிரி தொழில்நுட்ப குழுவைச் சேர்ந்த சுப்ரமணியன் ஆகிய 4 பேர் அடங்கிய அதிகாரிகள் குழு கர்நாடக தலைமை செயலாளர் சுபாசந்திராவை இன்று சந்தித்து பேசினர். 

இந்த சந்திப்பின் போது குடிநீருக்காக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்த விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த சந்திப்பு பற்றி விளக்கம் அளிக்க தமிழக அதிகாரிகள் மறுத்து விட்டனர். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக தலைமை செயலாளர், தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் குடிப்பதற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். காவிரியில் 3 டிஎம்சி தண்ணீர் திறக்க அவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் கர்நாடகாவிலும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் இப்போது தண்ணீர் திறந்து விட முடியாது. ஒருவேளை மழை பெய்து, நிலைமை சரியானால் தண்ணீர் திறப்பது பற்றி யோசிக்கப்படும். காவிரி நீர்பிடிப்பு பகுதியில் உள்ள 4 அணைகளில் 8.8 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதில் தமிழகத்திற்கு 3 டிஎம்சி தண்ணீர் திறப்பது முடியாத காரியம். இங்கும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது என்றார்.

இதனைத் தொடர்ந்து தமிழக அதிகாரிகளின் சந்திப்பு மற்றும் கோரிக்கை குறித்து கர்நாடக முதல்வரின் கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் கர்நாடக நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, காவிரி குழு அதிகாரிகள் கூடி சுமார் ஒருமணிநேரம் ஆலோசனை நடத்தினர்.

Comments