சென்னை: இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, அ.தி.மு.க., அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலர் தினகரன் தரப்பில் லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டில்லி லஞ்ச ஒழிப்புப் போலீசார், சுகேஷ் சந்திரா என்பவரை டில்லியில் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக, டில்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், லஞ்சத்தில் கொடிகட்டிப் பறக்கும் தகவல்கள் ஆதாரத்துடன், மத்திய அரசுக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. லஞ்சத்தைப் பற்றி அளவீடு செய்யும் பல்வேறு அமைப்புகளும், இந்தியாவிலேயே தமிழகம் தான் லஞ்சத்தில் முதல் இடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டன.
இதனால், தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து, மத்திய உளவுத் துறை, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ.,யின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு என, பலதுறைகளும் முடுக்கி விடப்பட்டன. அப்படி திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில்தான், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
தளவாய் சுந்தரம்
விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித் துறையினர் ரெய்டு செய்த போது, தளவாய் சுந்தரம், சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது, அவருக்கு உதவியாளராக இருந்து தற்போதும், அவருக்கு உதவியாளராக இருக்கும் லட்சுமி நாராயணம் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரைப் போலவே, தளவாய் சுந்தரம் தொடர்பில் இருக்கும் பல்வேறு நபர்கள் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித் துறையினர், அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போதுதான், டில்லியில் உள்ள சுகேஷ் சந்திரா என்பவர் மூலம், தேர்தல் கமிஷனில், இரட்டை இலையை, அ.தி.மு.க., அம்மா கட்சிக்கு பெறுவதற்காக லஞ்சம் பேசிக் கொண்டிருந்த விவரம் தெரிய வந்தது. அந்த விவரங்களையெல்லாம் அப்படியே எடுத்துக் கொண்டு வந்த வருமான வரித் துறை அதிகாரிகள், விவரங்களை, மத்திய அரசுக்கு அனுப்பி தீவிரமாக விசாரித்தால், இதில் மேலும் சிலர் சிக்குவர் என்று கூறியிருந்தனர்.
இதையடுத்து, மத்திய உளவுத் துறை போலீசார் தீவிரமாக முடுக்கி விடப்படனர். அவர்கள் சுகேஷ் சந்திராவை பின் தொடர்ந்து கண்காணித்ததில், அவர், அ.தி.மு.க.,வின் டில்லி அலுவலகத்தில் மேலாளர் போல செயல்பட்டு வரும் சந்திரசேகர் என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. அவரோடு சேர்ந்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு 60 கோடி ரூபாய் வரையில் பணம் கொடுத்து, இரட்டை இலை சின்னத்தை, அ.தி.மு.க., அம்மா கட்சிக்கு பெற்று தர பேரம் பேசும் விவரம் தெரிய வந்தது.
அதற்காக, முன்பணமாக 1 கோடியே 30 லட்ச ரூபாய் வரையில் பெற்று வந்து, மத்திய டில்லியில் உள்ள ஒரு பங்களாவில் தங்கியிருக்கும் விவரத்தையும் கண்டறிந்து, மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினர். உடனே, இந்தத் தகவல், டில்லி மத்திய குற்றப் பிரிவு போலீஸ் பிரிவுக்கு சொல்லப்பட்டு, அவர்களும், சுகேஷ் சந்திரா மற்றும் சந்திரசேகரை பின் தொடர்ந்தனர். அவர்களது போன் டேப் செய்யப்பட்டது. இதில் கிடைத்த பல்வேறு விவரங்களும், தேர்தல் கமிஷனுக்கு பணம் கொடுத்து, இரட்டை இலை சின்னத்தை பெறும் முயற்சியில் இறங்கியது தெரிய வந்ததால், அவர்கள் தங்கியிருந்த இடத்தில் அதிரடியாக புகுந்த போலீசார், சுகேஷ் சந்திராவை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், அ.தி.மு.க., அம்மா கட்சி துணைப் பொதுச் செயலர் தினகரன் கேட்டுக் கொண்டதன் பேரில்தான், தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் பேசி லஞ்சம் கொடுக்க, முன் பணமாக ஒரு கோடியே முப்பது லட்ச ரூபாய் தயார் செய்யப்பட்ட தகவல் ஆதாரப்பூர்வமாக கிடைத்துள்ளது.
தினகரன் கைது?:
இதை வைத்து, எப்.ஐ.ஆரில், தினகரன் பெயரும் சேர்க்கப்பட்டு விட்டது. சுகேஷ் சந்திரா முதல் கட்டமாக கைது செய்யப்பட்டிருக்கிறார். தினகரன், விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தேவையானால், விசாரணைக்குப் பின் அவரும் கைது செய்யப்படுவார்.
சுகேஷ் சந்திராவை யார் என்றே தனக்குத் தெரியாது என, தினகரன் கூறுகிறார். ஆனால், அவர் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த போது, அவரோடு படு நெருக்கமாக இருந்திருக்கிறார். தளவாய் சுந்தரம், ராஜ்யசபா உறுப்பினராக இருந்த போது, அவரோடும் நெருக்கமாக இருந்திருக்கிறார்.
தேர்தல் கமிஷன் அலுவலத்திலும் புல்லுருவிகள் இருப்பதாக தெரிகிறது. அதனால், சுகேஷ் சந்திரா, தினகரன் ஆகியோரிடம் நடக்கும் விசாரணையைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள், ஊழியர்கள் பலர் மீதும் தேவையானால், நடவடிக்கை எடுக்கப்படும்.
சசிகலா புஷ்பா புகார்: கடந்த வாரத்தில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நதீம் ஜைதியை, அ.தி.மு.க.,வின் எம்.பி.,யான சசிகலா புஷ்பா சந்தித்துப் பேசினார். அப்போது, தேர்தல் கமிஷனில் ஆட்களை செட் பண்ணி வைத்துக் கொண்டு, தினகரன், இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க., அம்மா கட்சிக்குப் பெற முயற்சிப்பதாக தனக்கு தகவல் வந்துள்ளது. அது குறித்து, தேர்தல் கமிஷன் கவனமாக இருந்து, நியாயமாக விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துச் சென்றார். அதையடுத்து, தேர்தல் கமிஷனில் நடமாடும் புரோக்கர்களை கண்டறியுமாறு, ஜைதியும், மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இப்படி பேரம் பேசி, இரட்டை இலை சின்னத்தை பெற முயற்சித்தவர்கள் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
Comments