சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலுக்கான செலவு விவரப் பட்டியல்கள், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்திய போது கிடைத்தது. அதையடுத்து, ஆர்.கே.நகரில் தேர்தலை நிறுத்துவது குறித்து, தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஒவ்வொன்றாக, தற்போது வெளியாகி வருகிறது. இதனால், அடுத்து என்னவிதமான ஆவணம் வெளியாகுமோ என்ற பதற்றத்தில் அ.தி.மு.க.,வினர் ஆழ்ந்துள்ளனர்.
இப்படி விஜயபாஸ்கரை குறிவைத்து, வருமான வரித் துறையினர் நடத்திய சோதனைக்கு பின்னணியில், அவரது செல்போன் பேச்சுக்கள் இருப்பதாக, வருமான வரித் துறை வட்டாரங்களில் இருந்து தகவல் பரவி இருக்கிறது.
அதனால், பதற்றம் அடைந்திருக்கும் தமிழக அமைச்சர்கள் பலரும் செல்போன் பேச்சை திடீர் என்று குறைத்து விட்டதாகக் கூறப்படுகிறது. எந்த விவரமாக இருந்தாலும், நேரில் வருமாறு பலரையும் அழைக்கின்றனர்.
செல்போன் பேச்சு விவரங்களை மத்திய உளவுத்துறையினர் டேப் செய்து, அதன் அடிப்படையிலேயே வருமான வரித்துறை மூலம் ரெய்டு நடப்பதாக, அமைச்சர்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர்.
Comments