ஜெ., உடல் வலிக்கு சசி கொடுத்த மாத்திரை எது? கோடநாட்டில் பணியாற்றிய டிரைவர் சந்தேகம்

தினமலர் செய்தி : 'முன்னாள் முதல்வர் ஜெ., மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை வேண்டும்' என, அ.தி.மு.க.,வின் பன்னீர் அணியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்துள்ளனர். இந்த அணியைச் சேர்ந்த, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், 'மாடியிலிருந்து ஜெ., தள்ளி விடப்பட்டதாக' பகிரங்கமாக சந்தேகம் கிளப்பியுள்ளார். 

கொலை முயற்சி

இந்நிலையில், கோடநாட்டில் பல ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றிய திவாகர், 42, அங்கு நடந்த பல்வேறு விஷயங்களை பற்றி கேள்வி எழுப்பி, ஜெ., மரணம் குறித்த சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளார். 

நமது நிருபரிடம் அவர் கூறியதாவது: 

நான், கோடநாட்டைச் சேர்ந்தவன்; என் தந்தை, அங்கு, 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அதனால், கோடநாடு எஸ்டேட்டில் டிரைவர் வேலை கிடைத்தது. 2005ம் ஆண்டிலிருந்து, 2009 வரை, ஐந்தாண்டுகள் அங்கு பணியாற்றினேன். 

எஸ்டேட்டுக்குள் ஜெ., வரும் போது, அவரது வாகனத்துக்கு முன் வரும் பாதுகாப்பு வாகனத்தை நான் தான் ஓட்டுவேன். 2006 தேர்தலில் தோற்ற பின், தொடர்ச்சியாக, நான்கு மாதங்கள் வரை, கோடநாட்டில் ஜெ., தங்கி இருந்தார். அந்த காலகட்டத்தில், ஜெ.,வும், சசிகலாவும் பேசும் பல விஷயங்களை நான் கேட்டுள்ளேன். எதையும் வெளியில் சொன்னதில்லை. 

ஆனால், அப்போது நடந்த பல சம்பவங்களை இப்போது நினைத்துப் பார்த்தால், 'அம்மா'வை (ஜெ.,) கொல்வதற்கு அன்றைக்கே முயற்சிகள் துவங்கி விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. 

கோடநாடு பங்களாவிலிருந்து பேட்டரி காரில், ஜெ., சசிகலா இருவரும் வருவர். பேட்டரி காரை, ஜெ., ஓட்டுவார். எஸ்டேட்டை சுற்றி பார்த்து விட்டு, அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்வர். ஒரு நாள் படகு சவாரி செய்து விட்டு, காரில் ஏறும்போது, 'சசி! ரொம்ப உடம்பு வலிக்குது. நான், 'ஸ்கார்பியோ'வுல போயிடுறேன்; நீ பேட்டரி காரில் வா' என்றார். 

ஆனால், அடுத்த நிமிடமே, சசிகலாவின் முகத்தைப் பார்த்து விட்டு, அவரும் பேட்டரி காரில் வருவதாக ஒப்புக் கொண்டார். உடனே, சசிகலாவிடம், ஒரு மாத்திரையை சித்ரா என்ற வேலைக்காரப் பெண் கொடுத்தார். அதை ஜெ.,விடம் சசிகலா கொடுத்து சாப்பிடச் சொன்னார். சாப்பிட்டவுடன், 'இப்போது தான் பரவாயில்லை' என்று ஜெ., சொன்னார். 

அந்த மாத்திரையை, ஜெ.,வுக்கு சசிகலா அடிக்கடி கொடுத்து வந்தார். அது என்ன மாத்திரை என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், சாப்பிட்டவுடன் உடல் வலி குறைகிறது என்றால், அது மெல்லக் கொல்லும் அபாயமுடைய வலி நிவாரணியாக இருந்திருக்குமோ என, இப்போது சந்தேகம் எழுகிறது. 

பயந்து நடுங்குவர்

ஜெ., அங்குள்ள எல்லாரிடமும் அன்பாக இருப்பார்; யாரிடமும் கடிந்து பேச மாட்டார். எனக்கு, அவர் தான், கீழ்கோத்தகிரி ஒன்றிய பொருளாளர் பதவியைத் தந்தார். ஆனால், சசிகலாவைப் பார்த்தாலே எல்லாரும் பயந்து நடுங்குவர். யாரிடமாவது, ஜெ., அன்பாகப் பேசுவதாகத் தெரிந்தால் அல்லது அவர்கள் சொல்லும் கோரிக்கையை ஜெ., ஏற்றுக் கொண்டதாகத் தெரிந்தால், அவர்களை உடனே வெளியேற்றி விடுவார். இதேபோல, நான்கு பேரை அடித்தே வெளியே அனுப்பியது எனக்குத் தெரியும். இந்த வயதில், ஜெ., இறந்து போவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. என்ன நடந்தது என்பது, சசிகலா கும்பலுக்கு மட்டுமே தெரியும்.

அவர் மீது உயிராக இருந்த என்னைப் போன்ற தொண்டர்களின் வேதனை, அவர்களை சும்மா விடாது. சட்டத்திலிருந்து, அவர்கள் தப்பிக்கலாம்; கடவுள் தரும் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. இவ்வாறு திவாகர் கூறினார்.

Comments