விஜயபாஸ்கர் தான் முதல் குற்றவாளி: ஓ.பி.எஸ்.,

தினமலர் செய்தி : சென்னை : ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தினால், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தான் முதல் குற்றவாளி என்பது தெரிய வரும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த கோரி, சென்னை, ராஜரத்தினம் மைதானத்தில் இன்று(மார்ச் 8) நடந்த உண்ணாவிரத போராட்ட முடிவில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

இறந்தது எப்போது

ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் அ.தி.மு.க., சென்று விட கூடாது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது. கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்யும் முயற்சி நடக்கிறது. எனவே தான் தர்ம யுத்தத்தை துவக்கினோம். 

இதன் துவக்கம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம். அவர், 4.30 மணிக்கு இறந்து விட்டார் என எனக்கு, 6.30 மணிக்கு தெரிய வந்தது. ஆனால், மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது, உண்மையை சொல்லாமல் காலம் தாழ்த்தினர். இரவு, 11.30 மணிக்கு அவர் இறந்து விட்டார் என்று அறிவித்தனர். 

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரம் எனக்கு தெரியப்படுத்தப்படவில்லை. தகவல் சொன்னதாக கூறிய அதிகாரி மீது வழக்கு தொடுக்கப்படும். அமைச்சர் விஜயபாஸ்கர், அப்பல்லோ மருத்துவமனையில் ஆட்களை நியமித்து, பிற நபர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தார். மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை வேண்டும். விசாரிக்கும் போது விஜயபாஸ்கர் தான் முதல் குற்றவாளி என்பது தெரிய வரும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments