எடப்பாடியார் எத்தனை நாளைக்கு முதல்வரா இருப்பார்.. இவரை நம்பி நெடுவாசல் போராட்டத்தை எப்படி கைவிடுவது?

உயிர் போனாலும்... OneIndia News : புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது; போராட்டத்தை கைவிடுங்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்வதை ஏற்க முடியாது என்று நெடுவாசல் போராட்டக்காரர் கூறியுள்ளனர். புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் 14வது நாளாக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.

எப்படி நம்புவது? எடப்பாடி பழனிசாமி எத்தனை நாட்களுக்கு முதல்வராக இருப்பார் என்று தெரியாத நிலையில், அவரது பேச்சை நாங்கள் எப்படி நம்புவது என்று கேள்வி எழுப்பி, முதல்வர் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளனர் நெடுவாசல் மக்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு மத்திய அரசுதான் இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, மத்திய அரசிடம் இருந்து முறைப்படி ரத்து அறிவிப்பு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று நெடுவாசல் மக்கள் உறுதியாக கூறியுள்ளனர்.

உயிர் போனாலும்... முறைப்படியான அறிவிப்பு வெளிவராமல் போராட்டத்தை கைவிட முடியாது என்று கூறியுள்ள மக்கள், குஜராத்தில் பிரதமர் மோடியும், கொங்கு மண்டலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இந்த திட்டத்தை தொடங்கி கொள்ளட்டும் என்றும் உயிர் போனாலும் இந்தத் திட்டம் ரத்து செய்யப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் போராட்டக்காரர்கள் கூறினர்.

15வது நாளாக.. இதனையடுத்து, 15வது நாளாக நாளையும் இந்தப் போராட்டம் தொடர உள்ளது. இரவும் பகலும் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் பெருமளவில் பங்கேற்று தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Comments