இளம் குற்றவாளி விடுதலை சர்ச்சை ; சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி

தினமலர் செய்தி : புதுடில்லி: மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் கூர்நோக்கு இல்லத்தில் தண்டனை அனுபவித்த இளம் குற்றவாளியை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தும் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. 2012 டிசம்பர் மாதம் நடந்த இந்த வழக்கில் சிக்கிய சிறுவன் என்ற காரணத்தினால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவன் சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். சிறைக்காலம் முடிந்ததால் நேற்று அவன் விடுவிக்கப்பட்டான் .இருப்பினும் பாதுகாப்பு கருதி அவன் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது .

கடந்த வாரத்தில் இளம் குற்றவாளியை விடுதலை செய்யக்கூடாது என டில்லி ஐகோர்ட்டில் சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு ஏற்கப்படவில்லை. தண்டனை காலம் முடிந்த ஒருவரை மீண்டும் சிறையில் அடைக்க முடியாது. அதே நேரத்தில் அவனது செயல்பாட்டை ஒரு கமிட்டி கண்காணிக்கும் என்றும் உத்தரவிடப்பட்டது .

இந்நிலையில் மகளிர் கமிஷன் சுப்ரீம் கோர்ட்டை நாடியது. மகளிர் கமிஷன் மனுவை சுப்ரீ்ம் கோர்ட் தள்ளுபடி செய்தது, குற்றவாளியின் தண்டனையை நீட்டிக்க சட்டத்தில் இடமில்லை என்றும் கூறியுள்ளது. சட்டத்தின்படியே அனைத்தும் நடந்துள்ளது . மனுதாரரின் கவலையில் நாங்களும் பங்கு கொள்கிறோம், அதே நேரத்தில் நாங்கள் எவ்வித உதவியும் செய்ய முடியாது என நீதிபதிகள் ஏ .கே. கோயல் , யு.யு. லலித் ஆகியோர் தெரிவித்தனர். 

இன்று கறுப்பு நாள் : பெண்கள் ஆணைய கமிஷன் தலைவர் மாலிவால் இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவிக்கையில்; நமது சட்டம் வலுவிழந்து காணப்படுகிறது , இன்று ஒரு கறுப்பு நாள், மேலும் நாங்கள் வீதிக்கு சென்று போராடுவோம் என்றார். 

ஆச்சரியமில்லை: சுவாமி: இன்றைய உத்தரவு எனக்கு எவ்வித ஆச்சரியமும் இல்லை, இது எனக்கு ஏற்கனவே தெரியும், நான் டில்லி ஐகோர்ட்டில் வாங்கிய ஆர்டர் மிக சிறந்தது என பா.ஜ ., தலைவரான சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

போராட்டம் தொடரும்: மாணவியின் தாயார் ஆஷாதேவி சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து கூறுகையில்; கோர்ட் இதில் எவ்வித உதவியும் செய்ய முடியாது என்பது எனக்கு தெரியும், இருப்பினும் எனது போராட்டம் தொடரும் என்றார் . 

நேற்று டில்லி ராஜ்பாத் மற்றும் ஜந்தர்மந்தரி்ல் மரணமடைந்த நிர்பயாவின் பெற்றோர்கள் மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர் .

Comments