டில்லியை தொடர்ந்து தமிழக அரசு மீது ஆம்ஆத்மி ஊழல் குற்றச்சாட்டு

தினமலர் செய்தி : சென்னை : வரும் புத்தாண்டு முதல் தமிழக அரசின் ஊழல்களின் பட்டியலை துறைவாரியாக வெளியிட உள்ளதாக ஆம்ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தெரிவித்துள்ளார். மேலும், 2016ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முக்கிய பங்காற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.டில்லி சட்டசபை தேர்தலின் போது, முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித்திற்கு எதிராக ஊழல் பட்டியலை வெளியிடப் போவதாக தெரிவித்த ஆம்ஆத்மி கட்சி, ஆட்சிக்கு வந்த பிறகு அதை பற்றி வாய் திறக்கவில்லை. மேலும் அடுத்தடுத்து மத்திய அரசு மற்றும் துணைநிலை ஆளுனருடன் மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறது. சமீப காலமாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு டில்லி கிரிக்கெட் வாரிய முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டது. இது குறித்து விசாரிக்க குழு ஒன்றையும் அமைத்தது. ஆனால் அந்த குழு அளித்துள்ள விசாரணை அறிக்கையில், அருண் ஜெட்லியின் பெயர் குறிப்பிடவில்லை. இதனால் ஆம்ஆத்மி கட்சிக்கும், பா.ஜ.,விற்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது.

இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம்ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், தமிழகத்தில் சென்னை மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் சென்றடையவில்லை. முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் நிதிகள் குறித்து வெளிப்படை தன்மை இல்லாததால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நிவாரண நிதி அரசிடம் தரவில்லை.மாறாக நேரடியாக மக்களிடையே சென்று நிவாரண நிதி மற்றும் பொருள்களை அளித்து வருகின்றனர். வெள்ள நிவாரண விஷயத்தில் தமிழக அரசு தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. இந்தியாவிலேயே தமிழகம்தான் ஊழலில் முதல் மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் துறை வாரியாக நடந்த ஊழல் பட்டியலை ஜனவரி 1ம் தேதி முதல் வெளியிட உள்ளோம். வரும் சட்டசபை தேர்தலில் மக்களோடு கூட்டணி வைக்கப்போகிறோம். தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். 2016 சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முக்கிய பங்காற்றும் என தெரிவித்தார்.

இதனால் டில்லியை தொடர்ந்து ஆம்ஆத்மி கட்சியின் கவனம் தமிழகம் பக்கம் திரும்பி உள்ளது. இருப்பினும், தமிழக அரசியல் கட்சிகளின் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம், வெள்ள நிவாரண போராட்டம், தமிழக அரசு மீதான ஆம்ஆத்மியின் குற்றச்சாட்டு உள்ளிட்ட அனைத்தும் வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலை குறிவைத்தே நடத்தப்படுவதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தமிழக தேர்தல் கமிஷன் தீவிரமாக மேற்கொண்டு வருவதும், தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்பதும் அரசியல் கட்சிகளின் அக்கறைக்கு முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது.

Comments