நான்கு நாள் மெத்தனமாக இருந்து விட்டு நள்ளிரவில் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு

தினமலர் செய்தி : டுவிட்டரில் டான் அசோக் என்பவர் சொல்வதைப் பார்த்தால், அரசின் செயலற்ற தன்மை விளங்கும்: சென்னையில் பெய்த பெருமழையை வெள்ளமாக மாற்றியது தமிழக அரசின் மெத்தனப் போக்கு தான் என, 'ஒயர்டு' உட்பட இதழ்கள் குற்றம் சாட்டியுள்ளன. அக்கட்டுரைகள் தரும் ஆதாரங்களை எளிதில் புரியும் வண்ணம் விளக்குவதே இப்பதிவு.

நவம்பர் 8, 9, 12, 13, 15, 23ம் தேதிகள்: சென்னையில் கன மழை பெய்கிறது.
நவம்பர் இறுதி வாரம் - தோராயமாக 26ம் தேதி:
* சர்வதேச வானிலை மையங்கள், சென்னையில், டிச., 1 மற்றும் 2ம் தேதி, 50 செ.மீ., வரையில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கின்றன.
* எச்சரிக்கையை ஏற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளிடம், அதாவது பொதுப்பணித் துறை செயலரிடம், செம்பரம்பாக்கம் ஏரியில், 22 மீட்டரில், அதாவது, 72 அடி இருக்கும் நீரின் அளவை, 18 மீட்டராகக் குறைக்கச் சொல்கின்றனர். குறைத்தால் 
மட்டுமே வர இருக்கும் அதீத கன மழையை ஏரி தாங்கும் என்றும் சொல்கின்றனர்.
நவம்பர் 27: எந்த நடவடிக்கையும் இல்லை.
நவம்பர் 28: எந்த நடவடிக்கையும் இல்லை.
நவம்பர் 29: எந்த நடவடிக்கையும் இல்லை.
நவம்பர் 30: எந்த நடவடிக்கையும் இல்லை.

சுருங்கச் சொன்னால், மழை மிகவும் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்த நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில், ஏரியில் இருக்கும் நீரை வெளியேற்றி, நீரின் அளவைக் குறைக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தும் கூட, எந்த நடவடிக்கையும் 
எடுக்கப்படவில்லை.பொதுப்பணித் துறை செயலர், தலைமைச் செயலரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார்; தலைமைச் செயலரோ, முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். 
இந்த இடத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பி.எஸ்.,சின் உத்தரவுக்காக, தலைமைச் செயலர் காத்திருக்கிறார் என்று தான், நாம் எழுதியிருக்க வேண்டும். 

ஆனால் இது, ஜெ.,வின் ஆட்சி. அவர் ஆட்சியில், 'அணையைத் திறக்க நான் உத்தரவிட்டுள்ளேன்; அணையை மூட நான் ஆணை பிறப்பித்துள்ளேன்' என, எல்லா வேலைகளையும், ஜெ.,வே இழுத்துப் போட்டுச் செய்வார் என்பதால், இதில் மட்டும் நாம், ஓ.பி.எஸ்.,சை இழுத்து 
விடுவது அறம் அல்ல.அதனால், தலைமைச் செயலர், ஜெ.,வின் ஆணைக்காகத் தான் காத்திருந்திருக்கிறார் என்பது குழந்தைக்கும் தெளிவு.

டிசம்பர் 1:

* சர்வதேச வானிலை மையங்கள் சொன்னதைப் போலவே கிட்டத்தட்ட, 50 செ.மீ., கன மழை பெய்கிறது. தாம்பரத்தில் அவர்கள் சொன்னதை போலவே, மிகச் சரியாக, 49 செ.மீ., பெய்தது.
* செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு, அரசு இணையதளக் குறிப்பின்படி, 314 கோடி கன அடியாக இருக்கிறது.
* டிச., 1ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, சென்னை கலெக்டர் சுந்தரவல்லியிடம் இருந்து, செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டதால், வினாடிக்கு, 5,000 கனஅடி நீரை வெளியேற்ற இருப்பதாகவும், இந்த அளவு வினாடிக்கு, 7,500 கனஅடி வரை உயர்த்தப்படலாம் என்றும், திடீரென ஒரு தகவல் கிடைக்கிறது.
* மாலை, 5:00 மணிக்கு, முதலில் ஏரியை திறக்கின்றனர். பெயரை வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், வினாடிக்கு, 10,000 கனஅடி நீரை வெளியேற்றியதாகவும், இவ்வளவு பெரிய வெள்ளத்தை திறந்து விட முடிவு செய்த அரசு, கண்டிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருக்கும் என தான் நம்பியதாகவும், ஒயர்டு இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
* தமிழக அரசின் இணையதளத்தில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு வெறும், 900 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டதாக குறிப்பிட்டிக்கின்றனர். ஆக மொத்தத்தில், செய்தியாளர்களுக்கு கலெக்டர் சொன்னபடி, வினாடிக்கு, 5,000 - -7,000 கனஅடியை திறந்து விட்டனரா அல்லது பொதுப்பணித்துறை ஊழியர் கூறியதைப் போல வினாடிக்கு, 10,000 கனஅடி நீர் திறந்து விட்டனரா அல்லது அரசு தளம் சொல்வதைப் போல வினாடிக்கு வெறும், 900 கனஅடி நீர் தான் திறந்து விட்டனரா, எது உண்மையோ இன்னும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது!

டிசம்பர் 2ம் தேதி

* அரசு தளத்தின்படி, டிச., 1ம் தேதி, ஏரியில் நீரின் அளவு, 83.48 அடி - 314 கோடி மில்லியன் கனஅடி. டிச., 2ம் தேதி ஏரியில் நீரின் அளவு, 74.08 அடி - 113 கோடி கனஅடி. ஆக, அறிவித்த வினாடிக்கு, 7,500 கனஅடிக்கு மாறாக கிட்டத்தட்ட வினாடிக்கு, 29,000 கனஅடி நீரை, டிச., 1ம் தேதி எந்த முன்னறிவிப்பும் இன்றி, திடீரென வெளியேற்றி இருக்கின்றனர். அதிகாலை, 2:00 மணிக்கு சென்னையை வெள்ளம் வந்தடைகிறது. இரவு, 10:00 மணிக்கு அபாயகரமான அளவில் திறந்து விடப்பட்ட வெள்ளம், துாங்கிக் கொண்டிருந்த மக்களையும், வீடுகளையும் மூழ்கடிக்கிறது. 

வெள்ளத்திற்கான காரணங்கள்:

கடந்த, 26ம் தேதியே பொதுப்பணித் துறை அதிகாரிகள், தங்கள் மேலதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கச் சொல்லியும், 27, 28, 29, 30 ஆகிய மழையில்லா தேதிகளில், இலவு காத்த கிளி போல, 'மேலிட' உத்தரவுக்காக காத்திருந்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர்.
* டிச., 1ம் தேதி மாலை, 4:00 மணிக்கு வெறும், 7,500 கன அடி மட்டுமே திறக்கப் போகிறோம் என செய்தி கொடுத்து, இரவு, 10:00 மணிக்கு, எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல், மக்கள் வெளியேற நேரமும் கொடுக்காமல், திடீரென வினாடிக்கு, 29,000 கனஅடி நீரை திறந்து விட்டது. 
* சொல்லாமல் கொள்ளாமல் திறந்து விட்டதை கொஞ்சம் சீக்கிரமாக 6:00 மணிக்கு திறந்து விட்டிருந்தால், இரவு, 10:00 மணிக்கு, வெள்ளம் சூழ்ந்திருக்கும். ஆனால் இரவு, 10:00 மணிக்கு திறந்ததால், அதிகாலை, 2:00 மணிக்கு வெள்ளம் சூழ்ந்து, மக்கள் தப்பிக்க வழியின்றி மாட்டிக் கொண்டனர். இவ்வளவு அபாயகரமான அளவு நீரை நடு இரவில் திறப்பது, மிகப் பெரிய தவறு.
* இந்த, 29,000 கன அடி திறப்பைப் பற்றி, பத்திரிகைகளுக்கு எந்தத் தகவலும் தரப்படவில்லை. மீண்டும் மீண்டும் கேட்ட பின், சில அதிகாரிகள் வாய்மொழியாக மட்டுமே, இதை டிச., 2ம் தேதி, எல்லாம் முடிந்தபின் தெரிவித்திருக்கின்றனர்.
* பொதுவாகவே ஏரியில் இருக்கும் நீரை, வெளியேற்றுகிறேன் பேர்வழி என வாளியைக் கவிழ்ப்பதைப் போல கழிப்பது மரபல்ல. அபாயகரமான அளவை எட்டிவிட்டால், வாளியில் துளையிட்டு நீரை வெளியேற்றுவதைப் போல, கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுவது தான் முறை. இதை நவம்பர், 27, 28, 29, 30ம் தேதிகளில் செய்திருந்தால் வெள்ளத்தை கண்டிப்பாக தடுத்திருக்க முடியும் என்றும், இந்த வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல; முழுக்க முழுக்க அரசு தான் இதற்கு காரணம் என்றும், நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 
* இதெல்லாம் போக, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக, அரசு அவசர அவசரமாக சாலைகள் அமைத்தது நினைவிருக்கலாம். அந்த குப்பை, கழிவுகள் எல்லாம் அடையாறு கடலில் கலக்கும் வழியை அடைத்துக் கொண்டதும், வெள்ளத்திற்கு முக்கிய காரணம் என்கிறார், சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.
* சென்னையை சுற்றியுள்ள நான்கு ஏரிகளையும், அடையாறு, கூவம் நதிப் பாதைகளையும், ஓட்டெரி, பங்கிங்காம் கால்வாய்களையும், ஜூன் - ஜூலை மாதத்தில் தூர்வாருவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அதைச் செய்யாமலோ, சரியாகச் செய்யாமலோ விட்டிருப்பது இன்னொரு முக்கிய காரணம். ஆனால், முறையாக துார் வாரியதைப் போல கணக்கு மட்டும் காட்டியிருக்கின்றனர்.

ஆக, மேலுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும்போது சென்னையையும், சென்னை மக்களையும் மீளாத்துயரில் தள்ளியிருக்கும் வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல. கன மழையை அரசின் மெத்தனமும், அதிகாரிகளின் பயமும், ஊரை அழித்த வெள்ளமாக மாற்றியிருக்கிறது. 
இப்போது நாம் அனைவரும், 'ஸ்டிக்கர்' பணிகள் பற்றி பேசுவதிலும், அ.தி.மு.க.,வை கிண்டலடிக்கும், 'மீம்'கள் செய்வதிலும். எல்லா கட்சிகளும் இப்படி தான் என உண்மைகளை அறியாமல் பேசுவதும் என, 'பிசி'யாக இருக்கிறோம். 

இன்னும் சிலரோ, 'ஏரியில் வீடு கட்டினால் வெள்ளம் வரத்தான் செய்யும்; பல்லாண்டு காலம் செய்த தவறு' என்றெல்லாம் பேசி அரசின் நிர்வாகமின்மைக்கும், மெத்தனப்போக்குக்கும் தங்களை அறியாமலேயே துணை போகின்றனர்; அரசும் அதையே தான் விரும்புகிறது. 
இந்திய ஊடகங்கள் நம்மை கவனிப்பதில்லை என கூக்குரலிட்டதன் பலனாக, சென்னை வெள்ளத்தின் காரணங்களை அலசி ஆராய்ந்து அவர்கள் உண்மைகளை வெளியிட்டிருக்கின்றனர். இதை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்? 

எந்த அளவுக்கு நிவாரணப் பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபாட்டுடன் வேலை செய்தனரோ, அதே அளவில் உண்மையை வெளிக் கொணர்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். ஆட்சியாளர்கள் மீதும் அதிகாரிகள் மீதும், முறையான சுதந்திரமான விசாரணை கமிஷன் வைத்து, உண்மையை உலகுக்கு கூறுவது மட்டும் தான் இறந்தவர்களுக்கும், இழந்தவர்களுக்கும் நாம் செய்யும் உண்மையான நிவாரணம்.

Comments