செம்பரம்பாக்கம் ஏரி குறித்து 4 நாள் கழித்து அரசு விளக்கம் தருவதன் ரகசியம் என்ன?- ஸ்டாலின் கேள்வி

OneIndia News : சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு 4 நாட்கள் கழித்து அரசு விளக்கம் அளிப்பதன் ரகசியம் என்ன என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் தென்சென்னையின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. பல லட்சம் மக்கள் சில மணிநேரங்களில் அகதிகளான கொடுமை நடந்தேறியது. இதற்கு காரணமே செம்பரம்பாக்கம் ஏரி நீரை மிக அதிக அளவில் முன்னறிவிப்பின்றி திடீரென திறந்துவிட்டதுதான் என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அதாவது டிசம்பர் 1-ந் தேதி அதிக கனமழை பெய்யும்; 50 செ.மீ. மழையளவாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை கவனத்தில் கொண்டு நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து படிப்படியாக நீரை திறந்துவிட்டிருந்தால் ஒரே நேரத்தில் பல்லாயிரம் கன அடிநீரை திறந்துவிட வேண்டிய சூழ்நிலை வந்திருக்காது என்பது பொதுவான குற்றச்சாட்டு. இதற்கு தலைமைச் செயலர் ஞானதேசிகன் விளக்கம் அளித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் செம்பரம்பாக்கம் ஏரி முறைப்படிதான் திறக்கப்பட்டது; கரையோர பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டது; கனமழை பெய்த காரணத்தால் சென்னை நகருக்குள் வெள்ளம் புகுந்தது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிய பிறகு 4 நாட்கள் கழித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டிய ரகசியமும், சூட்சமமும் என்ன? தலைமைச் செயலாளரின் அறிக்கையை நானும் படித்தேன். ஒரு பெரிய கட்டுரையைப்போல், கதையை போல் இருக்கிறது.

தலைமைச் செயலாளரின் அறிக்கையின்படி பார்த்தால் முதலமைச்சரோ, அமைச்சரோ, தலைமைச்செயலாளரோ அனுமதி தர வேண்டியதில்லை என்று ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார். ஆனால் இந்த நான்கரை ஆண்டு காலத்தில் எந்த தண்ணீரை திறந்துவிடுவதாக இருந்தாலும், அது ஏரிகளில் இருந்து திறந்துவிடுவதாக இருந்தாலும், ஆறுகளில் இருந்து திறந்துவிடுவதாக இருந்தாலும், முதல் அமைச்சர் அம்மா அவர்களின் உத்தரவுபடிதான் திறந்துவிடப்படுகிறது என்று இதுவரை நான்கரை ஆண்டுகாலமாக சொல்லப்பட்டு வந்தது. அப்படிதான் அறிக்கையில் வெளி வந்தது. ஆனால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பின் போது மட்டும் முதலமைச்சருக்கு, தலைமைச் செயலாளருக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்வதை பார்க்கும்போது இதில் உள்ள உண்மை நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆளுநரை சந்தித்து மிகத் தெளிவாக இதுகுறித்து முறையான நீதிபதி தலைமையில் அமையக்கூடிய விசாரணை தேவை என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார். எந்த தவறும் செய்யவில்லை என்றால் விசாரணை கமிஷன் அமைக்க ஏன் இந்த அரசு தயங்குகிறது?

முதல்அமைச்சர் அம்மா அவர்களின் அனுமதியோடுதான் மழை வந்தது என்று மாவட்ட ஆட்சியர் சொல்லும் அளவிற்கு ஒரு ஆட்சி இருக்கும்போது, இந்த ஏரியை திறக்க மட்டும் முதலமைச்சரின் உத்தரவு தேவையில்லை என்று தலைமைச் செயலாளர் கூறியிருப்பது வேடிக்கைக்குரிய ஒன்று. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Comments