வெள்ள தடுப்பு திட்டங்களை கிடப்பில் போட்ட அதிகாரிகள்

தினமலர் செய்தி : வீணாகும் நீரை சேமிக்கவும், வெள்ள பாதிப்பை தடுக்கவும், அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலை திட்டங்கள் அளித்து, ஏழு ஆண்டுகளாகியும் தமிழக அரசு நிர்வாகம் துாங்கி வழிவதால், வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை வெளியேற முடியவில்லை.

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், 2005ல் மிகப்பெரிய அளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. மத்திய அரசின் நிலத்தடி நீர் வாரியம், மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை, சென்னை பல்கலை மற்றும் அண்ணா பல்கலை ஆகியவை இணைந்து, பல ஆய்வுகள் மேற்கொண்டு, சென்னையை மிரட்டும் வெள்ளத்துக்கு தீர்வு என்ன என, திட்டங்கள் வகுத்தன.இதன்படி, மூன்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 

20வது இடங்களில்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 20 இடங்களில் அண்ணா பல்கலை சார்பில், தானியங்கி வானிலை ஆய்வு கருவிகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பகுதியின் மழை அளவு தனித்தனியாக கணிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு மழை பெய்யும்; எவ்வளவு தண்ணீர் அந்த பகுதியில் தேங்கும்; அந்த நீர் சென்று தேங்கும் தாழ்வான பகுதி எது; அவற்றில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் எவை என தகவல்கள் திரட்டப்பட்டு, அந்த திட்டம் சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம், 2009ல் அளிக்கப்பட்டது. 

ஆனால், இன்று வரை இந்த ஆய்வை, இரு துறைகளும் துாசி தட்டி எடுக்காமல் அலட்சியமாக வைத்துள்ளன. சென்னையில், 2005ல் வெள்ளம் பாதித்தபோது, அண்ணா பல்கலையின், 'ரிமோட் சென்சிங்' ஆராய்ச்சி துறை, மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று, விமானம் மூலம் வெள்ள பகுதிகளை படமெடுத்தது. இதில், தொழில் நுட்ப ரீதியான ஆய்வுக்காக, 'லைடார்' எனப்படும் ஒளிக்கதிர் வீச்சு மூலம், நவீன, 'டிஜிட்டல் கேமரா' மூலம் விமானத்தில் இருந்து படம் எடுக்கப்பட்டு, நீர் தேங்கும் தாழ்வான பகுதி மற்றும் நீர்நிலைகள் அடையாளம் காணப்பட்டன. இந்த அறிக்கையும் தமிழக அரசிடம் சமர்ப்பித்து, ஆறு ஆண்டுகளாகிறது; அதிகாரிகள் எந்த 
நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கால்வாய்கள் சிதிலம்:

சென்னை பல்கலை, மத்திய அரசுடன் இணைந்து மழைநீர் வடிகால் தொடர்பான ஆராய்ச்சி செய்துள்ளது. சென்னையில் உள்ள மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் எத்தனை; அவற்றில் தற்போதைய நிலை என்ன என ஆய்வு செய்தது. இதில், பல இடங்களில், மழைநீர் வடிகால்வாய்கள் தலைகீழாக, அதாவது நீரோட்டத்துக்கு எதிர் திசையில் அமைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.பல கால்வாய்கள் சிதிலமடைந்து விட்டன. பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்களில் இருந்து மழைநீர் கால்வாய்க்கு சட்ட விரோதமாக இணைப்பு கொடுக்கப்பட்டு, கழிவுநீரும், குப்பையும் சேர்ந்துள்ளதும் கண்டறியப்பட்டது. செயற்கைக்கோள் புகைப்படங்களின் மூலம், இதற்கான ஆதாரங்கள் கிடைத்ததை வைத்து, மழைநீர் கால்வாய் கட்டமைப்பை, நவீன தொழில் நுட்பத்துடனும், புவி அமைப்பியலுக்கு ஏற்ப, வல்லுனர்களின் ஆய்வுப்படி மாற்றியமைக்கவும் திட்டமிடப்பட்டது. இந்த திட்டமும் தமிழக அரசிடம் வழங்கப்பட்டு கிடப்புக்கு போய் விட்டது.

Comments