சென்னையில் தாழ்வான பகுதிகளில் வடியாத வெள்ளம்- எம்.எல்.ஏ, எம்.பி.,யை முற்றுகையிட்ட மக்கள் (படங்களுடன்)

OneIndia News : சென்னை: சென்னையில் மழை விட்டும் வெள்ளம் வடியாத காரணத்தால் வில்லிவாக்கம் அன்னை சத்யா நகரில் வீடுகளுக்குள் கழிவுநீரும், மழைநீரும் கலந்துள்ளது. இதனால் கடந்த 5 நாட்களாக மின்சார வசதியின்றியும், குடிநீர் வசயின்றியும் தவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அடிப்படை வசதி செய்து தராத மாநகராட்சியைக் கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால், பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் அன்னை சத்யா நகர் பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இரண்டரை அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. வெள்ளநீரை அகற்றக்கோரி எம்.எல்.ஏ., எம்.பி. ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் பாதியிலேயே ஆய்வுப்பணிகளை முடித்துக்கொண்டு வெளியேறினர்.
சென்னையில் கடந்த நான்கு நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் மாநகராட்சி பகுதிகள், புறநகர்ப் பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் மழைநீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் கடந்த மூன்று நாள்களில் பெய்துவரும் பலத்த மழையில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முறிந்து விழுந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

மழையால் வடசென்னை முக்கிய போக்குவரத்துச்  சாலைகளான திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சிமென்ட்ரி சாலை, எம்எஸ் கோயில் தெரு, எருக்கஞ்சேரி சாலை, வியாசர்பாடி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, உள்ளிட்ட சாலைகள் முற்றிலும் சேதமடைந்தன.

வடசென்னை பகுதிகளாக தண்டையர்பேட்டை, கொருக்குப்பேட்டை மீனம்பாள் நகரில் உள்ள சுமார் 100 வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால், அந்தப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வடசென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோர் பார்வையிட்டு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
அதேபோல கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர், ராஜீவ் காந்தி நகர், தண்டையார்பேட்டை தமிழர் நகர், அன்னை சத்யா நகர், புதுவண்ணாரப்பேட்டை இந்திரா நகர், கைலாசம் தெரு ஆகிய இடங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

புழுதிவாக்கம், ராம்நகர், சதாசிவம் நகர், பத்மாவதி தெரு, ராமலிங்கம் நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் நீர் வெளியேற்ற முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மடிப்பாக்கம் குபேரன் நகர், கோவிந்தசாமி, கிரிஜா நகர், பெரியார் நகர், இந்து காலனி போன்ற பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. மோட்டார் மூலம் நீர் உறிஞ்சப்பட்டாலும், பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் முழுவதும் வடியவில்லை.

சென்னை மாநகராட்சி 24ஆவது வார்டு புத்தாகரம் பகுதியில் உள்ள பத்மாநகர் 7-ஆவது தெருவில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. எஸ்.பி.ஓ காலனி, சிவசக்தி நகர், சரஸ்வதி நகர், சூரப்பேட்டை ஊராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளிலும் உரிய கால்வாய்கள் இல்லாததால் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்தது.
வில்லிவாக்கம் பாடி மேம்பாலம் அருகே அன்னை சத்யா நகர் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழையால் இங்கு வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இரண்டரை அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. வெள்ளத்தை அகற்றக்கோரி வில்லிவாக்கம் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் ஜே.சி.டி. பிரபாகர் எம்.எல்.ஏ. மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஒருவாரமாக தூக்கமின்றி, குளிக்க முடியாமல் தவிக்கிறோம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 5 நாட்களாக வெள்ளநீர் தேங்கியுள்ளது. மின்சார வசதியின்றியும், குடிநீர் வசதியின்றி தவிப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மத்திய சென்னை பகுதி எம்.பி விஜயகுமார் சம்பவ இடத்திற்கு வந்த போது அவரிடமும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

கடந்த 5 நாட்களாக சமையல் செய்யமுடியாமல் தவிக்கும் தங்களுக்கு சாப்பாடு எதுவும் தேவையில்லை. தண்ணீரை வெளியேற்றி வாழவழி செய்ய வேண்டும் என்றும் குடிநீர், மின்சார வசதி செய்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல வேளச்சேரி, கொளத்தூர். தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளநீர் வடியவில்லை. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் அதில் கொசுக்கள் முட்டையிட்டு புழுக்கள் உற்பத்தியாகியுள்ளதாகவும் வீடுகளுக்குள் தங்க முடியாமல் உறவினர்களின் வீடுகளுக்குள் தஞ்சமடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Comments