ஜெ., வழக்கில் நாளை 'அப்பீல்':கர்நாடக அரசு தீவிரம்

தினமலர் செய்தி : பெங்களூரு : சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் விடுதலையை எதிர்த்து, கர்நாடக அரசு, நாளை, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்கிறது.
விடுதலை:சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பினால், ஜெயலலிதா, முதல்வர் பதவியை இழந்து, சில வாரங்கள், சிறை தண்டனையை அனுபவிக்க நேர்ந்தது.
இவரைப்போல், மற்ற மூவரும் சிறைவாசம் அனுபவித்தனர்.பின், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் விடுவித்தார். ஜெயலலிதாவின் வருமானம், அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் இருப்பதால், அவரை விடுதலை செய்வதாகவும், அவரைப்போல், மற்றவர்களையும் விடுதலை செய்வதாகவும், நீதிபதி குமாராசாமி தெரிவித்தார்.

ஆச்சார்யா பரிந்துரை:நீதிபதி தெரிவித்த வருவாய் கணக்கு விவரங்களில், பிழை இருக்கிறது என்றும், எனவே, மேல் முறையீட்டுக்கு செல்ல உகந்த வழக்கு என்றும், கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்தார் இது தொடர்பாக, கர்நாடக அரசுக்கு, பரிந்துரையும் செய்தார். கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமாரும், மேல் முறையீடு செய்ய வலியுறுத்தினார்.

இதனடிப்படையில், ஜெ., உள்ளிட்ட நான்கு பேரின் விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என, கடந்த, 1ம் தேதி, கர்நாடக அமைச்சரவை முடிவு செய்து அறிவித்தது. மேலும், உச்ச நீதிமன்றத்திலும், கர்நாடக அரசு வழக்கறிஞராக ஆச்சார்யாவே தொடர்வார் எனவும், கர்நாடக அரசு அறிவித்தது.மனுத்தாக்கல்அதையடுத்து, மேல்முறையீடு செய்வதற்கான பணிகளில், ஆச்சார்யா ஈடுபட்டிருந்தார்.இந்த பணிகள் முடிந்ததால், நீதிபதி குமாரசாமி தீர்ப்பை எதிர்த்து, நாளை, உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு, மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்கிறது.

Comments