கெஜ்ரிவால்-டில்லி கவர்னர் இடையே மோதல் முற்றுகிறது

தினமலர் செய்தி : புதுடில்லி : அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டில்லி அரசு, டில்லி துணைநிலை ஆளுனரான நஜீப் ஜக்குடன் மோதல் போக்கை கைபிடிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்நிலையில், டில்லி தலைமை செயலரை துணைநிலை ஆளுனர் நியமித்துள்ளதை கெஜ்ரிவால் நேரடியாக தாக்கி விமர்சித்துள்ளார்.


டில்லி தலைமை செயலராக உள்ள கே.கே.சர்மா மே 24 வரை விடுமுறையில் சென்றுள்ளார். அதனால் தற்காலிக தலைமை செயலராக சகுந்தலா கம்லினை டில்லி துணை நிலை ஆளுனர் நியமித்துள்ளார். இது குறித்து டில்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் கேட்ட போது, நஜீப் ஜங் எனது அரசு நடவடிக்கைகளில் குறுக்கிடுகிறார்.அரசியமைப்பிற்கு எதிராக மூத்த அதிகாரியான சகுந்தலாவை தலைமை செயலராக நியமித்துள்ளார். கவர்னர் அவரது முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வெளிப்படையாக கவர்னரை தாக்கி பேசி உள்ளார். மேலும் அவர் கூறுகையில், தற்போது கவர்னர் நியமித்துள்ள சகுந்தலாவிற்கு டில்லி மின்துறை நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவைகள் வட்டி மூலம் டில்லி அரசை கொள்ளையடிக்க பார்க்கின்றன. அதனால் டில்லி மின்துறை நிறுவனங்களுக்கு சாதகமாகவே சகுந்தலா செயல்படுவார் எனவும் குற்றம்சாட்டி உள்ளார்.

டில்லி துறை நிலை ஆளுனர் மீதும், தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சகுந்தலா மீதும் டில்லி அரசு குற்றம்சாட்டி வரும் நிலையில், தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து விலகி செல்லுமாறு டில்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து தனக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக நஜீப் ஜங்கிற்கு சகுந்தலா கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். இந்த கடிதம் தற்போது தகவல் துறை இயக்குனரகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இது ஆம்ஆத்மி தலைமையிலான டில்லி அரசுக்கு புதிய நெருக்கடியை உருவாக்கி உள்ளது. இருப்பினும் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு உடனடியாக பதில் அளித்துள்ள துணைநிலை ஆளுனரின் அலுவலகம், அரசியலமைப்பு சட்டத்தின்படி முதல்வரின் ஆலோசித்து அதிகாரிகளை நியமிக்கும் உரிமை துணைநிலை ஆளுனருக்கு உள்ளது என தெரிவித்துள்ளது.

சகுந்தலாவை தலைமை செயலராக நியமிப்பது குறித்து பரிந்துறை செய்து கவர்னர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கோப்புக்கள் கெஜ்ரிவால் அலுவலகத்தில் 36 மணி நேரம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலிடம் இருந்து முறையான பதில் ஏதும் வராததாலேயே கவர்னர், சகுந்தலாவை தலைமை செயலாராக நியமித்து உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. கெஜ்ரிவால்-துணைநிலை ஆளுனர் இடையேயான மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., தலைவர் நளின் கோஹ்லி, கெஜ்ரிவாலும் அவரது சகாக்களும், அரசியலமைப்பு விதிமுறைகள், நடைமுறைகள் என்ன என்பது குறித்து தெரிந்து கொண்டு அரசை நடத்துவது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளார்.

Comments