சதுரகிரியில் மழை 'சதிராட்டம்': வெள்ளத்தில் சிக்கிய 2000 பேர்

தினமலர் செய்தி : வத்திராயிருப்பு: விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்தனர். இதில் 3 பேர் பலியாயினர். வெள்ளம் இழுத்துச் சென்றதில் எட்டு பேரை காணவில்லை. அவர்களை தேடும்பணியில் தீயணைப்புத் துறையினர், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.இதனால், பலி உயரும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.


சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில் நேற்று வைகாசி அமாவாசை வழிபாடு நடந்தது. 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர். அதிகாலை முதல் மலையேறத் துவங்கினர். நேற்று மதியம் ஒரு மணியளவில் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அங்குள்ள ஆறுகள், ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து அடிவாரமான தாணிப்பாறையில் அருவியாக விழுந்தது.

அங்கு வத்திராயிருப்பு கீழத்தெருவை சேர்ந்த இளைஞர்கள் பொன்ராஜ், பாஸ்கர், மனோஜ், மதன் உட்பட 10க்கும் மேற்பட்டோர் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களை காட்டாற்று வெள்ளம் இழுத்துச் சென்றது. பலர் அங்கிருந்த மரக்கிளையை பற்றியபடி தப்பினர். பொன்ராஜ்,18, உயிரிழந்து ஒரு மரக்கிளையில் சிக்கினார். பாஸ்கர் உட்பட சிலரை காணவில்லை. மற்றொரு ஓடையில் சிக்கி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்தார்.
2,000 பேர் மீட்பு: மலைப்பாதையில் பல இடங்களில் குறுக்கிடும் ஓடைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் மதியத்திற்கு பிறகு அந்த இடங்களை பக்தர்கள் கடக்க முடியவில்லை. இதனால் 2,000க்கும் மேற்பட்டோர் மலையிலேயே சிக்கி தவித்தனர். மந்தித்தோப்பு என்ற இடத்தில் ரோட்டின் குறுக்கே தரைப்பாலத்தில் வெள்ளம் சென்றதால் மீட்பு பணிக்கு சென்ற தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்தை கடக்க முடியாமல் தவித்தன.

அரைமணி நேரத்திற்குப்பின் வெள்ளம் குறைந்த பிறகே அந்த இடத்தை கடந்து சென்றன. வத்திராயிருப்பு, ஸ்ரீவி., விருதுநகர் உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வந்த தீயணைப்பு படையினர் மலைக்குச் சென்று கயிறு கட்டி பக்தர்களை மீட்டனர். கோரக்குண்டா என்ற இடத்தில் பெரிய பாறை உருண்டு விழுந்து மலைப்பாதை அடைபட்டது. இதனால் பக்தர்கள் செங்குத்தான மலைப்பாறையின்மீது ஏறி அந்த இடத்தை கடந்தனர். சங்கிலிப்பாறை என்ற இடத்தில் ஆற்றை கடக்க முயன்று மேலும் சில பக்தர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் கலெக்டர் ராஜாராமன், மகேஸ்வரன் எஸ்.பி., டி.ஆர்.ஓ. முனுசாமி, சிவகாசி ஆர்.டி.ஓ., அமர்குஷ்வாஹா, பொன்னுப்பாண்டியன் எம்.எல்.ஏ., உட்பட பலர் அங்கு முகாமிட்டு மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் எட்டு பேர் காணாமல் போனதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்களை தீயணைப்பு துறையினர், போலீசார் தேடுகின்றனர். உடன் வந்தவர்கள் காணாமல் போனதால் வெளியூர் பக்தர்கள் பதறியபடி அடிவாரத்திலேயே உள்ளனர்.

யாரேனும் பாதையை கடக்க முடியாமல் இருக்கின்றனரா என போலீசார் மீட்பு படையினர் தேடி வருகின்றனர். தற்போது பாதிக்கப்பட்டவர்களை தமிழக அமை்ச்சர்கள் செல்லூர் ராஜூ , செந்தில் பாலாஜி, உதயகுமார் உள்ளிட்டோர் ஆறுதல் கூறி வருகின்றனர். 

Comments