ஆகா ., சபாஷ் ! சரியான போட்டி ! வர்ரீயா., வர்ரீயா., விவாதம் நடத்த

தினமலர் செய்தி : புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தல் நாள் நெருங்கி வருவதால் , இங்கு தேர்தல் ஜூரம் பிடித்துள்ளது. பா.ஜ., ஆம் ஆத்மி கட்சி இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் போட்டிக்களத்தில் 3 வதாக உள்ளது. இதிலும் பா.ஜ., தரப்பில் முதல்வர் வேட்பாளராக முன்னாள் ஐ .பி.எஸ்., அதிகாரியான கிரண்பேடியை அறிவித்ததால் மேலும் படு சூடு பிடித்துள்ளது.
கெஜ்ரிவாலுக்கு பதிலுக்கு , பதில் மல்லுக்கட்டும் தகுதி கொண்ட கிரண்பேடி முதல்வர் இடத்திற்கு சரியான தேர்வு என டில்லி மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. கெஜ்ரிவால் வரித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வேலையை ராஜினமா செய்து விட்டு அரசியலுக்கு வந்தார். இவர் பிரபல காந்தியவாதி அன்னா ஹசாரேயிடம் அரசியல் பாடம் பயின்றவர். ஹசாரே லோக்பால் மசோதா தொடர்பாக டில்லியை குலுக்கிய போராட்டத்தில் 2 ம் கட்ட தலைவராக செயல்பட்டவர் கெஜ்ரிவால், பின்னர் ஹசாரேயுடன் ஏற்பட்ட ( அரசியல் கட்சி துவக்குவதில் ) பிணக்கு காரணமாக கெஜ்ரிவால் பிரிந்தார். ஆம்ஆத்மி கட்சியை துவக்கினார். தொடர்ந்து அவர் முதல் கட்டத்திலேயே டில்லி முதல்வரானார். பின்னர் அவர் 49 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஹசாரே பள்ளியில் இருந்து வந்தவர்கள் : கெஜ்ரிவாலும், கிரண்பேடியும் ஒரு ஒற்றுமை உண்டு, கிரண்பேடியும் ஐ.பி.எஸ்., அதிகாரி பதவியை ராஜினமா செய்து விட்டு அன்னா ஹசாரேயுடன் சேர்ந்தவர். ஹசாரே நடத்திய போராட்டத்தில் கிரண்பேடிக்கு முழுப்பங்கு இருந்தது. சமீப காலமாக இவர் மோடியின் செயல்பாட்டை பாராட்டியே வந்தார். ஆனால் ஹசாரேயுடனான உறவை முறித்து கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த வாரத்தில் பா.ஜ.,வில் சேர்ந்தார். சில நாட்களிலேய முதல்வர் வேட்பாளரானார்.
இவர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் கெஜ்ரிவாலுக்கு பொறுக்க முடியவில்லை, பா.ஜ.,வில் வேறு ஆள் இல்லையோ என்று விமர்சித்து அத்துடன் நிறுத்தி கொண்டார்.
மல்லுக்கட்டும் கெஜ்ரிவால்- கிரண்பேடி ; இந்நிலையில் கெஜ்ரிவால் , அளித்த பேட்டியில் கிரண்பேடியுடன் நான் நேரடி விவாதம் நடத்த விரும்புகிறேன். இதற்கு அவர் தயாரா என்று சவால் விட்டார்.

இதற்கு பதில் அளித்த கிரண்பேடியோ, அய்யா சாமி, உங்களுக்கு விவாதத்தில் நம்பிக்கை இருக்லாம், எனக்கு செயல்பாட்டில் தான் நம்பிக்கை, அதே நேரத்தில் விவாதிப்போம், வரவிருக்கும் புது சட்டசபையில் நேருக்கு நேர் விவாதித்து ஆக்கப்பூர்வ பணியாற்றுவோம் பை என்று பதிலடி கொடுத்துள்ளார். ஆக மொத்தம் கெஜ்ரிவாலும், கிரண்பேடியும் அன்னா ஹசாரே பள்ளியில் இருந்து வந்தவர்கள் என்பதால் யாரும், யாருக்கும் சோடை போக மாட்டார்கள் என்றே கருத்து நிலவுகிறது. இன்னும் தேர்தல் முடிவு வரும் வரை பொறுத்திருப்போம்.

Comments