2022 ல் எல்லோருக்கும் வீடு கிடைக்கும் ; டில்லி பிரசாரத்தில் பிரதமர் மோடி

தினமலர் செய்தி : புதுடில்லி : டில்லியில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசுகையில் வரும் 2022 ல் ஏழைகள் அனைவருக்கும் வீடு வழங்குவோம் என்றும் , நாட்டின் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல மக்களாகிய உங்களின் ஆதரவை தாருங்கள், மக்களின் கனவை நாங்கள் நனவாக்குகிறோம் என்று தெரிவித்தார்.

டில்லி பிரசார கூட்டத்தில் , பிரதமர் மோடி மேலும் பேசுகையில்;
இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள 3 மாநில முதல்வர்களை வரவேற்கிறேன். தற்போது நாடு முழுவதும் பா.ஜ., வுக்கு அலை வீசுகிறது. இதே நிலை தற்போது டில்லியில் இருக்கிறது. இதனை நாம் சமீபத்திய தேர்தலில் இருந்து பார்த்துள்ளோம். ஏழை மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம் அரியானாவில் இருந்த வாரிசு அரசியலை ஒழித்துள்ளோம் . ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தலை மீறி அதிக ஓட்டு பதிவு நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சியினர் மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயங்களுடன் விளையாடியது. நாங்கள் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாட்டை வளர்ச்சிக்கு அழைத்து செல்வோம்.

ஏழைகளை புறக்கணித்த காங்., ஏழை மக்கள் வங்கி அருகே கூட வர விடாமல் காங்கிரஸ் தடுத்து வந்தது. ஆனால் நாங்கள் இன்று பல கோடி பேருக்கு வங்கி கணக்கை துவக்கி கொடுத்திருக்கிறோம். ஒரு வாரத்தில் ஒரு கோடி பேருக்கு வங்கி கணக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். டில்லியில் 19, 50, 000 பேருக்கு வங்கி கணக்கு ஏற்படுத்தியுள்ளோம். ஜனவரி 10 வரை 11 கோடி ஏழை மக்கள் வங்கிக் கணக்கு துவங்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. டில்லியில் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் கொடுப்போம். டில்லியில் மின்சார பிரச்னையில் இருந்து மீட்போம். ஜெனரேட்டர் இல்லாத டில்லியை உருவாக்கி தருவேன். ஊழல் ஒழிப்பு பணியில் நாங்கள் இறங்கியுள்ளோம். உங்கள் ஆதரவை தாருங்கள் உங்கள் கனவுகளை நிறைவேற்றுகிறோம்.
குழப்பவாதி கெஜ்ரிவால் - நாட்டில் குழப்பம் ஏற்படுத்த விரும்பினால் அவர்கள் நக்சல்களாக்தான் உருவாக வேண்டும் என கெஜ்ரிவாலை மோடி மறைமுகமாக தாக்கி பேசினார். இவ்வாறு மோடி பேசினார்.பார்லி., தேர்தலுக்கு பின்னர் மோடி பிரதமர் ஆன பின்னர் டில்லியில் நடக்கும் முதல் பிரசார கூட்டம் என்பதால் டில்லி மற்றும் அருகில் உள்ள அரியானா, உத்தர பிரதேசம் பகுதியில் இருந்து திரளான தொண்டர்கள் பங்கேற்றனர். ஆம் ஆத்மியின் எதிர்ப்புக்கு மத்தியில் நடக்கும் பொதுக்கூட்டம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. 100 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மெகா திரைகளில் மோடியின் பேச்சு ஒளிபரப்பு செய்யப்பட்டன. எல்.சி.டி., டி.வி.,க்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மோடியின் ஒரே நோக்கம் ;
மத்திய அமைச்சர் வெங்கையா பேசுகையில்; மத்திய அரசு கடுமையாக உழைத்து வருகிறது. டில்லியில் பா.ஜ., ஆட்சி வருவதற்கான சரியான தருணம் இது. இந்த நேரம் வந்து விட்டது. தற்போது பிரதமர் மோடியின் புகழ் பரந்து விரிந்துள்ளது. மோடியின் ஒரே நோக்கம் நாட்டின் வளர்ச்சியை கொண்டே உள்ளது. பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த பா.ஜ.,வுக்கு ஓட்டளியுங்கள். கொள்ளை கும்பல் ஆட்சியை நாம் விரட்டி அடித்துள்ளோம். பிற மாநிலங்களில் தற்போது பா.ஜ.,ஆட்சி மலர்ந்து வருவது போல் டில்லியிலும் மக்கள் பா.ஜ.,வை தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 40 நாட்களில் ஆட்சி நடத்த முடியாமல் கெஜ்ரிவால் தப்பி ஓடி விட்டார். இதில் இருந்தே அவர் ஆட்சி நடத்த தகுதி அற்றவர் என நிரூபணம் ஆகியுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசினார். வேலை வாய்ப்பு பெருக்கம்: அமித்ஷா ; பா.ஜ., தலைவர் அமித்ஷா பேசுகையில் , பெட்ரோல் , டீசல் விலையை கடந்த 7 மாதத்தில் 10 முறை குறைத்துள்ளோம். பிரதமர் மோடி பணவீக்கத்தை குறைத்துள்ளார். வேலை வாய்ப்பை பெருக்க பிரதமர் மோடியின் மேக் இந்தியா திட்டம் பெரும் உதவியாக இருந்துள்ளது.
சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றியை குவித்த 3 மாநில முதல்வர்கள் மகராஷ்ட்டிர முதல்வர் பட்னாவிஸ், அரியானா முதல்வர் எம்.எல். கத்தார், ஜார்கண்ட் முதல்வர் ரகுபர்தாஸ், மத்திய அமைச்சர்கள், பா.ஜ., தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

* 40க்கு 24 அளவு கொண்ட மேடை
* 2,500 பஸ்களில் வந்த தெண்டர்கள்
*ஆயிரக்கணக்கான போலீஸ் குவிப்பு.

Comments